டெல்லி சட்டசபை தேர்தல்: 55 தொகுதிகளில் ஆம் ஆத்மிக்கு சி.பி.எம். ஆதரவு!!
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் 55 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியை ஆதரிப்பதாக சி.பி.எம். அறிவித்துள்ளது.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு வரும் 7-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் ஓய இருக்கிறது. வரும் 10-ந் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்) பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் கூறியதாவது:
டெல்லியில் மொத்தம் 15 தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுகிறோம். எஞ்சிய 55 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியை ஆதரிக்க முடிவெடுத்துள்ளோம். கடந்த காலத்தில் இதேபோல் பகுஜன் சமாஜ் கட்சியை ஆதரிக்கும் நிலைப்பாட்டை மேற்கொண்டிருந்தோம்.
எங்களுடைய பிரதான நோக்கம் டெல்லியில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான்.. குறிப்பாக டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் அமர்ந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த நிலைப்பாட்டை மேற்கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு பிரகாஷ் காரத் கூறினார்.












Click it and Unblock the Notifications