மோடியின் திடீர் பாக். பயணத்துக்கு இ.கம்யூனிஸ்ட் 'ஷாக்' வரவேற்பு!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணத்தை வரவேற்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா, ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி திடீரென தாம் பாகிஸ்தானுக்குப் போவதாக அறிவித்தார். இந்தியாவுக்கு புறப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னர் ட்விட்டரில் இத்தகவலை மோடி வெளியிட்டது பரபரப்பை கிளப்பியது.

ஆப்கான் தலைநகர் காபூலில் இருந்து நேராக லாகூர் சென்ற மோடி, அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்பை நேரில் சந்தித்து பேசினார். இச்சந்திப்புக்கு பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதேபோல் பல்வேறு கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. ஆனால் பிரதமர் மோடியின் இந்த பயணத்தை வரவேற்கிறோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா கூறியதாவது:
இருநாடுகளிடையேயான உறவில் நிறைய விரிசல்கள் இருக்கின்றன. அண்மையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்திப்பு, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூடனான சந்திப்பு உள்ளிட்டவைகள் இந்த முட்டுக்கட்டைகளை தகர்த்து வந்தன.
இதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடியும் தற்போது பாகிஸ்தானுக்கு சென்றிருக்கிறார். அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும். ஆகையால் பிரதமர் மோடியின் இந்த பயணம் வரவேற்கத்தக்கது.
இவ்வாறு டி.ராஜா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications