தொழிலதிபர் வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற சிபிஎம் பிரமுகர்.. கேரளாவில் பரபரப்பு
காசர்கோடு: கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில், வெளிநாடு வாழ் இந்தியரான தொழிலதிபரின் வீட்டுக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட முயன்ற சிபிஎம் கட்சிப் பிரமுகர் சிசிடிவி கேமரா மூலம் சிக்கினார்.
முதலில் இவர் ஏதோ திருடன் என்றுதான் சந்தேகிக்கப்பட்டது. கடைசியில் பார்த்தால் இவர் வளையோடி பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் என்று தெரிய வந்து போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிசிடிவி கேமராப் பதிவு மூலம் இவர் சிக்கியுள்ளார்.
சம்பந்தப்பட்ட வீடு யூனுஸ் என்ற தொழிலதிரின் வீடாகும். இவர் தனது குடும்பத்துடன் வளைகுடாவில் வசித்து வருகிறார். வீட்டில் யாரும் இல்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு வீட்டுக்குள் புகுந்து விட்டார் ராகவன்.
திங்கள்கிழமையன்று வீட்டின் முன் கதவு திறந்து கிடந்ததைப் பார்த்த யூனுஸின் உறவினர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
வீட்டில் பணமோ நகைகளோ எதுவும் இல்லையாம். இதனால் ராகவனின் திருட்டு முயற்சி வெற்றி பெறவில்லை. அதேசமயம் வேறு ஏதாவது திருட்டுப் போயிருக்கிறதா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் பதிவாகியிருந்த சிசிடிவி கேமராப் பதிவைப் பார்த்துதான் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நபர் ராகவன் என்று தெரிய வந்தது. அவர் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications