மே. வங்க சட்டசபை தேர்தல்: காங்கிரஸுடன் மார்க்சிஸ்ட் கூட்டணி? சீதாராம் யெச்சூரி 'சூசகம்'
டெல்லி: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைய வாய்ப்பிருப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி 'சூசகமாக' தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய சிறப்பு மாநாடு 37 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கூட்டணி உட்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் விவாதித்து முடிவெடுக்கப்பட உள்ளன.

குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதே நேரத்தில் திரிணாமுல், பா.ஜ.க.வை வீழ்த்த மார்க்சிஸ்ட் கட்சியும் காங்கிரஸும் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து கொல்கத்தாவில் சீதாராம் யெச்சூரியிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், கொல்கத்தாவில் இன்று நடைபெறும் சிறப்பு மாநாட்டில் 400க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், காங்கிரஸுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வைப்பது குறித்து இன்றைய மாநாட்டுக்குப் பிறகு ஆலோசித்து முடிவெடுக்கப்படும். அதேநேரத்தில், பிற ஜனநாயக அமைப்புகளுடன் கூட்டணி அமைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் தயாராகவே உள்ளது. இந்த மாநில தேர்தல் எங்களுக்கு மிகவும் முக்கியமான தேர்தல். மேற்கு வங்கத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாக இது இருக்கும் என்றார்.
பொதுச்செயலராக உள்ள யெச்சூரியைப் பொறுத்தவரையில் மேற்கு வங்க மாநிலத்தில் மீண்டும் இடதுசாரிகள் ஆட்சியை கொண்டுவர வேண்டிய நெருக்கடி உள்ளது. இதனால் அவர் தனித்துப் போட்டியிடுவதை விட காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கவே வாய்ப்புள்ளது. இதனையே அவர் சூசகமாக ஜனநாயக சக்திகளுடன் கூட்டணிக்கு தயார் என தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.












Click it and Unblock the Notifications