119 தான்.. பாஜகவுக்கு சிவசேனா கடைசிக் கெடு!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு 119 தொகுதிகள்தான் தர முடியும் என்று சிவசேனா திட்டவட்டமாக கூறியுள்ளது. இதனால் கூட்டணி உடையலாம் என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 20 வருடமாக கூட்டணி அமைத்து செயல்பட்டு வரும் கட்சிகள் சிவசேனாவும், பாஜகவும். ஆனால் அதில் தற்போது விரிசல் விழ ஆரம்பித்துள்ளது.
மோடி அலை கொடுத்த தெம்பில் மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் மோதி வருகிறது பாஜக. இதனால் சிவசேனா கோபமடைந்துள்ளது.

இந்த நிலையில் மகாராஷ்டிர சட்டசபைக்கு அக்டோபர் 15ம் தேதி பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிக இடங்களில் போட்டியிட பாஜக விரும்புகிறது. ஆனால் அதை நிராகரித்து விட்டது சிவசேனா. இதையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையே பூசல் வெடித்தது.
இதுதொடர்பாக தொடர் பேச்சுவார்த்தைகளில் இரு கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. ஆனால் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் தற்போது தனது இறுதி தொகுதிப் பங்கீட்டை சிவசேனா அறிவித்து விட்டது.
மொத்தமுள்ள 288 சட்டசபை தொகுதிகளில் தனக்கு 151, பாஜகவுக்கு 119, 18 தொகுதிகள் மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு. இதுதான் இறுதி என்று சிவசேனா அறிவித்து விட்டது.
ஆனால் பாஜக 135 தொகுதிகளைக் கேட்டு வருவதால் இந்த அறிவிப்புக்கு பாஜக என்ன பதில் சொல்லப் போகிறது என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது.
ஆனால் பாஜகவுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்குவதற்காக தான் முதலில் திட்டமிட்டிருந்த 155 தொகுதிகள் என்பதிலிருந்து 151 என்று இறங்கி வந்துள்ளதாக சிவசேனா கூறியுள்ளது. இதற்கு மேலும் இறங்கி வர முடியாது என்றும் அது கூறி விட்டது.
ஆனால் கடந்த 2009 தேர்தலிலும் இதே 119 தொகுதிகளைத்தான் சிவசேனா, பாஜகவுக்குக் கொடுத்தது என்பதால் இதை பாஜக ஏற்காது என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications