மரணத்துடன் போராடும் 10 வயது சிறுவன்... ஜெய்ப்பூரின் ஒரு நாள் போலீஸ் கமிஷனராக ஆனான்!
ஜெய்பூர்: ஜெய்பூரைச் சேர்ந்த மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் 10 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றி வைக்க அவரை ஒரு நாள் போலீஸ் கமிஷனராக்கி காவல் துறை அழகு பார்த்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரைச் சேர்ந்தவர் கிரிஷ்(10). சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமை மோசமாக இருப்பதால் அவர் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுவனிடம் உனது ஆசை என்னவென்று கேட்கப்பட்டதற்கு நான் போலீஸ் கமிஷனராக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கிரிஷின் ஆசை பற்றி ஜெய்பூர் போலீஸ் கமிஷனர் ஜங்கா ராவிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் சிறுவனின் ஆசையை நிறைவேற்றி வைக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து நேற்று கிரிஷ் ஜெய்பூர் நகர போலீஸ் கமிஷனராக்கப்பட்டார்.
ஒரு நாள் கமிஷனரான கிரிஷுக்கு போலீசார் சல்யூட் அடித்தனர். அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார். மேலும் கேமராக்களுக்கு தனது காக்கி சீருடையில் சிரித்தபடி அழகாக போஸ் கொடுத்தார்.
தனது மகனின் வாழ்வில் அவர் போலீஸ் கமிஷனராக இருந்த தினம் தான் மகிழ்ச்சியான நாள் என கிரிஷின் தந்தை ஜகதீஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜெய்பூர் கமிஷனர் ஜங்கா ராவ் கூறுகையில்,
காவல் துறையை பற்றி நல்ல எண்ணம் இருந்தால் தான் அதில் சேர வேண்டும் என்று தோன்றும். கிரிஷுக்கு காவல் துறை மீது நல்ல எண்ணமும், மரியாதையும் உள்ளதால் அவர் போலீஸ் அதிகாரியாக ஆசைப்படுகிறார். இது காவல் துறைக்கு நல்ல விஷயம் ஆகும் என்றார்.












Click it and Unblock the Notifications