அரபிக்கடலில் மையம் கொண்ட அஷோபா புயல்… கர்நாடகம், கேரளாவில் கனமழை
பெங்களூர்: கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள ‘அஷோபா‘ புயல் காரணமாக தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் கடலோர மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மும்பைக்கு மேற்கே 830 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள அஷோபா புயல், மேலும் வலுவடைந்து அடுத்த 24 மணிநேரத்தில் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், இதனால், தெற்கு குஜராத், கடலோர கர்நாடகா, கோவா உள்ளிட்ட மேற்கு கடற்கரையோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பொழியும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடக மாநில மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும், வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியிருந்தது. அதேபோல கர்நாடகா, கேரளாவில் மழை தீவிரமடைந்துள்ளது.

பருவமழை தீவிரம்
தென்மேற்கு பருவமழை கடந்த 5ம் தேதி முதல் கேரளாவில் தொடங்கி கர்நாடக கடலோர மாவட்டங்களிலும் பெய்து வருகிறது. தற்போது மாநிலத்தில் ஒருசில பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இந்த நிலையில் தற்போது அரபிக்கடலில் புயல் மையம் கொண்டுள்ளது. அந்த புயலுக்கு அஷோபா என்று பெயரிடப்பட்டுள்ளது.

சூறைக்காற்றுடன் கனமழை
அஷோபா புயல் தீவிரமாக இருப்பதால் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் போன்ற இடங்களில் தொடர்ந்து சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது. தட்சிண கன்னடா மாவட்டத்தை பொறுத்தவரை மங்களூரு நகரம், பண்ட்வால், பெல்தங்கடி, புத்தூர், சுள்ளியா, விட்டலா ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக சூறைக்காற்றுடன் தொடர் கனமழை பெய்து வருகிறது.

பள்ளி சேதம்
பெல்தங்கடி பகுதியில் காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஒரு பெரிய மரம் முறிந்து அருகே இருந்த அரசு பள்ளி மீது விழுந்தது. இதில் பள்ளியின் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக பள்ளியில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தட்சிண கன்னடா மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். இந்த தொடர் கனமழையால் அந்த பகுதி மக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை
அரபிக்கடலில் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி பகுதியில் கடலோரத்தில் வசிக்கும் மக்களுக்கும், சுற்றுலா பயணிகள் யாரும் கடலில் இறங்க வேண்டாம் என்றும், மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காற்றுடன் கனமழை
இதனிடையே அரபிக்கடலில் அஷோபா புயல் மையம் கொண்டுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு மணிக்கு 80 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications