ஆட்டத்தை தொடங்கிய பைபர்ஜாய்.. வெளுத்து வாங்கும் மழை.. சுழன்றடிக்கும் காற்று.. வேரோடு வீழ்ந்த மரங்கள்
அகமதாபாத்: பைபர்ஜாய் புயல் கரையைக் கடந்து வரும் நிலையில் குஜராத்தில் பல இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. புயலினால் குஜராத்தின் கட்ச் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் தெற்கு பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடலில் கடந்த 5 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து புயலாக உருமாறியது. 'பைபர்ஜாய்' என பெயரிடப்பட்ட இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து கடந்த 11-ந்தேதி அதிதீவிர புயலாக வலுவடைந்தது. மிக தீவிர புயலான இந்த பைபர்ஜாய் புயல் இன்று மாலை 6.30 மணியளவில் கரையைக் கடக்க தொடங்கியது.

புயலானது குஜராத்தின் கட்ச் மாவட்டம் மாண்ட்விக்கும், பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே குஜராத்தின் ஜகாவு துறைமுகம் அருகே கரையைக் கடக்க தொடங்கியுள்ளது. புயல் கரையைக் கடக்க தொடங்கியதில் இருந்து பலத்த காற்று வீசி வருகிறது. புயல் முழுவதுமாக கரையைக் கடக்க நள்ளிரவை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயலின் மையப்பகுதி கரையை நெருங்கும் போது மணிக்கு 125- 130 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதே புயல் காற்றினால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன. மழையும் வெளுத்து வாங்கி வருகிறது. புயல் காரணமாக குஜராத் கடற்கரையை ஒட்டியுள்ள துவராகா, ஒகா, நலியா, பூஜ், போர்பந்தர் மற்றும் காண்ட்லா ஆகிய பகுதிகளில் இன்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது.
புயல் கரையக் கடந்து வரும் இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன. பதாகைகள், பிளாஸ்டிக் தாள்கள் என புயலினால் தரையில் குப்பைகளாக கிடந்த பல பொருள்களும் ஆங்காங்கே பறந்து சென்றதை காண முடிந்தது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சகணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications