வங்கக் கடலில் உருவானது குலாப் புயல்- இன்று மாலை கரையை கடக்கிறது- ஆந்திரா, ஒடிஷாவுக்கு ஆரஞ்சு அலர்ட்
அமராவதி/ புவனேஸ்வர்: வங்கக் கடலில் உருவான குலாப் புயல் இன்று மாலை வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிஷா இடையே கரையைக் கடக்கிறது. இதனையடுத்து இரு மாநிலங்களுக்கும் இந்திய வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
வங்கக் கடலில் செப்டம்பர் மாதங்களில் புயல் உருவாவது அரிதான நிகழ்வாகும். 2015-ல் பியார் எனும் புயல் செப்டம்பரில் வங்கக் கடலில் உருவானது.
Recommended Video
2018-ல் டாயி என்ற மற்றொரு புயல் வங்கக் கடலில் உருவானது. தற்போது குலாப் என்ற புயல் வங்க கடலில் மையம் கொண்டிருக்கிறது.
இடைவிடாத சண்டை... செம கடுப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின்... அந்த அமைச்சருக்கு கூடிய விரைவில் கல்தா?
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி இருந்தது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு குலாப் என பெயரிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இந்த குலாப் பெயரை பரிந்துரைத்திருந்தது.
இப்புயல் மேற்கு நோக்கி நகர்ந்து வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிஷா பகுதிகளிடையே அதாவது கோபால்பூர்- கலிங்கப்பட்டினம் இடையே இன்று மாலை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இரு மாநிலங்களுக்கும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிஷா பகுதிகளுக்கு இந்திய வானிலை மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. மேலும் இப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடலோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
குலாப் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை துறைமுகத்தில் 2-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் 1-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாம்பன், நாகை, காரைக்கால் தனியார் துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.
இப்புயல் காரணமாகவும் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாகவும் தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
வரும் 29-ந்தேதி தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். புயல் உருவாகியிருப்பதால் இன்றும், நாளையும் குமரி கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இங்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், தேவகோட்டை 14 செ.மீ., மணப்பாறை, சேரன்மகாதேவி தலா 11 செ.மீ., மதுரை விமான நிலையம், முசிறி தலா 10 செ.மீ., குளித்தலை 8 செ.மீ., வேடசந்தூர், சத்தியமங்கலம், வாடிப்பட்டி, கரூர், அவலாஞ்சி தலா 6 செ.மீ. மழை பெய்துள்ளது.