ஒடிசாவில் அதிகாலையில் கரையை கடந்தது தயே புயல்.. பலத்த காற்றுடன் கொட்டித்தீர்க்கும் கனமழை!
வங்கக்கடலில் உருவான தயே புயல் இன்று அதிகாலை ஒடிசாவில் கரையை கடந்தது.
புவனேஷ்வர்: வங்கக்கடலில் உருவான தயே புயல் இன்று அதிகாலை ஒடிசாவில் கரையை கடந்தது.
புயல் கரையை கடந்ததால் தெற்கு ஒடிசா மற்றும் கடலோர ஆந்திராவில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது.
கிழக்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மியான்மர் கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டது.

தயே என பெயர்
இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்பகுதியில் நேற்று இரவு புயல் சின்னமாக மாறியது. இதைத்தொடர்ந்து இந்த புயலுக்கு தயே என பெயரிடப்பட்டது.

கரையை கடந்தது
இந்த புயல் இன்று அதிகாலை ஒடிசாவின் கோபால்பூர் பகுதியில் கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது 23 கிமீ வேகத்தில் காற்று வீசியதாக புவனேஷ்வர் வானிலை மைய இயக்குநர் ஹெச் ஆர் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.

கொட்டும் கனமழை
புயல் கரையை கடந்த பிறகு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார். தயே புயல் கரையை கடந்ததை தொடர்ந்து கஜபதி, கன்ஜம், பூரி, ராயகாடா, காலஹண்டி, கொரபட், நபரங்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

மிக கனமழை பெய்யும்
ராயகாடா, காலஹண்டி, கொரபட், நபரங்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை வரை கனமழை தொடரும் என்றும் புவனேஷ்வர் வானிலை மையம் தெரிவித்துள்ளது. பாலங்கீர், பாரஹ், சாம்பல்பூர், உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் அம்மாநில வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மழை
கடலோர ஆந்திராவிலும் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே புயல் காரணமாக வடதமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில நேரங்களில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications