சொத்து குவிப்பு வழக்கில் அப்பீல் மனு- ஜெ. வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் நாளை 2-வது நாளாக இறுதி வாதம்
பெங்களூரு: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. அப்போது ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் தமது இறுதிவாதங்களை முன்வைக்க உள்ளார்.
ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக கர்நாடகா அரசு மற்றும் திமுக பொதுச்செயலர் அன்பழகன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் போது கர்நாடகா அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, பிவி ஆச்சார்யா ஆகியோர் தமது வாதங்களை முன்வைத்தனர்.

சொத்து குவிப்பு வழக்கின் முதல் புகார்தாரர் என்ற அடிப்படையில் சுப்பிரமணியன் சுவாமியும் தமது இறுதி வாதத்தை முன்வைத்தார். மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அன்பழகன் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் தமது இறுதிவாதங்களை முன்வைத்து வருகிறார். அவர் நாளையும் நாளை மறுநாளும் தமது இறுதிவாதத்தை முன்வைக்கக் கூடும். அப்போது, பெங்களூர் விசாரணை நீதிமன்றம் (நீதிபதி குன்ஹா) தீர்ப்பில் உள்ள தவறுகளை அவர் பட்டியலிட உள்ளார்.
அதே நேரத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய கர்நாடகா அரசுக்கு உரிமை இல்லை என்ற வாதத்தை நாகேஸ்வரராவ் முன்வைப்பாரா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை.












Click it and Unblock the Notifications