சொத்துக் குவிப்பு வழக்கு: சசிகலா தரப்பு இறுதி வாதம் முடிந்தது
பெங்களூர்: பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தரப்பு இறுதி வாதம் நிறைவடைந்துள்ளது.
சுதாகரன், இளவரசி ஆகியோர் தங்களது இறுதி வாதத்தை நாளை தொடங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா தரப்பு இறுதி வாதம் கடந்த ஜூலை 23ஆம் தேதி நிறைவடைந்தது.
சசிகலா தரப்பு வாதம்
இதைத் தொடர்ந்து அவரது தோழி சசிகலா தரப்பு இறுதி வாதம் தொடங்கியது. அவரது தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் மணிசங்கர் வங்கிப் பரிவர்த்தனை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அவர் வாதத்தில் எடுத்துரைத்தார். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற சசிகலா தரப்பு இறுதி வாதமும் இன்று முடிவடைந்தது.
சுதாகரன், இளவரசி
அதனைத் தொடர்ந்து, சுதாகரன், இளவரசி தரப்பினர் இறுதி வாதத்தை நாளை மீண்டும் தொடங்க நீதிபதி, ஜான் மைக்கேல் டி குன்ஹா உத்தரவிட்டார். சுதாகரன் மற்றும் இளவரசியின் வழக்கறிஞர் அமீத் தேசாய், ஓரிரு நாளில் இறுதி வாதத்தை நிறைவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகத்தை நீக்க வழக்கு
இதனிடையே முதலமைச்சர் ஜெயலலிதா சொத்து சேர்ப்பதற்கு சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஊன்றுகோலாய் இருந்ததாக, குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள வாசகத்தை நீக்கக்கோரி தாக்கல் செய்த வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்க உள்ளது.
முடிவுக்கு வரும் வழக்கு
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா தரப்பு இறுதி வாதங்கள் நிறைவடைந்துவிட்டன. சுதாகரன், இளவரசி தரப்பு வாதங்களும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. எந்த வித தடங்களும் இன்றி குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு இறுதி வாதம் முடிவடையும் நிலையில் கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.