வெறுப்புல சுட்டா பொறுத்துக்கலாம்... ஆனா பருப்பு சுடுதே பாஸ்... விரைவில் கிலோ ரூ. 250 ஆகிறது
டெல்லி: தொடர்ந்து விலையேற்றத்தைச் சந்தித்து வரும் துவரம் பருப்பின் விலை, விரைவில் கிலோ ரூ. 250ஐத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போதிய அளவு பருவமழை பெய்யாதது, பருவம் தவறிய மழை போன்ற காரணங்களினால் நாட்டில் 2014-15ஆம் ஆண்டில் பருப்பு உற்பத்தி 20 லட்சம் டன் அளவுக்கு குறைந்துள்ளது. இதனால், கடந்த சில மாதங்களாக பருப்பு வகைகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட பதுக்கல்காரர்கள், பருப்பு வகைகளைப் பதுக்கி, தட்டுப்பாட்டை அதிகரித்து மேலும் விலையை உயர்த்தி வருகின்றனர். தற்போது சந்தையில் சில்லறை விலையில் துவரம் பருப்பு கிலோ ரூ. 200ஐத் தாண்டி விற்பனையாகிறது.

இறக்குமதி...
எனவே, பருப்பு வகைகளின் விலையைக் கட்டுப்படுத்தும் வகையில், வெளிநாடுகளில் இருந்து பருப்பு வகைகளை இறக்குமதி செய்தல், பருப்பு வகைகளைப் பதுக்குவதற்கு தடை விதித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

நடவடிக்கை...
இதுதவிர பருப்பு வகைகளைப் பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. பதுக்கி வைக்கப்பட்டுள்ள பருப்புகளை மீட்கும் முயற்சியிலும் அரசு ஈடுபட்டுள்ளது.

மீட்பு...
நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் அதிரடி சோதனைகளில் 75 ஆயிரம் மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான பருப்புகள் மீட்கப்பட்டுள்ளன. இதனால், பருப்பு வகைகளின் விலை குறையும் என மக்கள் எதிர்பார்த்தனர்.

விலை உயர்வு...
ஆனால், துவரம் பருப்பின் விலை விரைவில் கிலோ ரூ.250ஐத் தொட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் மேலும் கவலை அடைந்துள்ளனர்.

பருப்பு களஞ்சியம்...
தென்னிந்தியாவின் பருப்பு களஞ்சியமாகக் கருதப்படும் கர்நாடகாவில் உள்ள கல்புர்கி மாவட்டத்தில் இந்தாண்டு பருப்பு விளைச்சல் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவாகவே விளைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications