ரோஹித் வெமுலா பிறந்தநாள் அன்று மாணவர்களுடன் ராகுல் காந்தி உண்ணாவிரதம்
ஹைதராபாத்: ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலாவின் பிறந்தநாள் அன்று மாணவர்களுடன் சேர்ந்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியும் உண்ணாவிரதம் இருந்தார்.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ரோஹித் வெமுலா உள்பட 5 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து ரோஹித் கடந்த 17ம் தேதி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலை செய்ய தூண்டப்பட்டதாகக் கூறி மாணவ, மாணவியர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ரோஹித்தின் பிறந்தநாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு பல்கலைக்கழக வளாகத்தில் ரோஹித்திற்கு சிறப்பு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. 2 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.
நள்ளிரவு 12.10 மணிக்கு பல்கலைக்கழகத்திற்கு வந்த அவர் ரோஹித்தின் புகைப்படம் முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களை ராகுல் சந்தித்து பேசினார்.
அவரும் மாணவர்களுடன் சேர்ந்து ஒரு நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருந்தார். 17 மணிநேரம் பல்கலைக்கழகத்தில் இருந்த அவர் மாலையில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு 5.45 மணிக்கு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.












Click it and Unblock the Notifications