உ.பியில் தலித் சிறுமிகள் பலாத்காரம் செய்து கொலை… தலைமைச்செயலர் அதிரடி நீக்கம்
லக்னௌ: உத்தரபிரதேசத்தில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக மாநில தலைமைச் செயலாளராக இருந்த ஜாவேத் உஸ்மானி அதிரடியாக நீக்கப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக அலோக் ரஞ்சனை மத்திய அரசு நியமித்துள்ளது
உத்தரப்பிரதேச மாநிலம் உஷைத் கிராமத்தைத் சேர்ந்த, 14, 15 வயதுள்ள இரு சிறுமிகள் கடந்த 27-ம் தேதி இரவு காணாமல் போயினர்.
இதுகுறித்த வழக்கை காட்ரா சதாத்கஞ்ச் காவல்துறை பதிவு செய்ய மறுத்தது. 28-ம் தேதி காலை இரு சிறுமிகளின் உடல்களும் மாமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டன.
உயிரிழந்த ஒரு சிறுமியின் தந்தை கூறுகையில், "காவல்துறை யின் உதவியை நாடினோம். அதில் ஒரு காவலர் இரண்டு மணி நேரத்தில் சிறுமிகள் வீடு திரும்பி விடுவர் எனத் தெரிவித்தார். ஆனால், தூக்கில் தொங்கிய நிலையில்தான் அவர்கள் கிடைத்தார்கள்" என்றார்.
இச்சம்பவத்தால் வெகுண்டெழுந்த கிராம மக்கள் காவல்துறையின் அலட்சியத்தைக் கண்டித்து போராட்டத்தில் இறங்கினர்.
பிரேதப் பரிசோதனையில் இரு சிறுமிகளும் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இரு காவலர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப் பட்டனர்.
காவலர்கள் பணி நீக்கம்
இது தொடர்பாக, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அதுல் குமார் சக்ஸேனா கூறியதாவது:
வழக்கில் தேடப்படும் ஏழு பேரில், 5பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சர்வேஷ் யாதவ் மற்றும் சத்ரபால் யாதவ் ஆகிய 2 போலீஸாரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சர்வேஷ் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பப்பு மற்றும் அவதேஷ் யாதவ் என்ற 2 சகோதரர்களும் கைது செய்யபட்டுள்ளனர்.
பப்பு மற்றும் அவதேஷின் சகோதரர் உர்வேஷ், காவலர் சத்ரபால் மற்றும் மேலும் இருவரைத் தேடி வருகிறோம் என்றார்.
இரு காவலர்கள் மீது, குற்றச் சதி வழக்கு பதியப்பட்டுள்ளது. மற்ற ஐவர் மீது பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
ரூ.5 லட்சம் நிவாரணம்
இதனிடையே இச்சம்பவம் துரதிருஷ்டவசமானது எனத் தெரிவித்துள்ள முதல்வர் அகிலேஷ் யாதவ், பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் அக்குடும்பத்தினருக்குப் பாது காப்பும் தேவையான உதவிகளும் அளிக்கப்படும் என்றார். மேலும் இவ்வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் எனவும் அகிலேஷ் உறுதியளித்துள்ளார்.
சிபிஐ விசாரணை
இதனிடையே பாதிக்கப்பட்ட பெற்றோர், உ.பி. காவல்துறையின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரியவை. அவர்களை நம்ப முடியாது என்பதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதியும் இது தொடர் பாக சிபிஐ விசாரணைக்கு உத்தர விட வேண்டும் என வலியுறுத்தி யுள்ளார்.
போராட்டம்
தலித் சிறுமிகள் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மகளிர் அமைப்பினர், மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
தலைமைச்செயலர் நீக்கம்
இந்த நிலையில் உ.பி. மாநில அரசின் தலைமைச் செயலாளராக அலோக் ரஞ்சனை மத்திய அரசு நியமித்துள்ளது. இளம்பெண்கள் பலாத்கார சம்பவம் தேசிய அளவில் எதிரொலிக்கப்பட்டதையடுத்து, தலைமைச் செயலாளராக இருந்த ஜாவேத் உஸ்மானி அதிரடியாக நீக்கப்பட்டு, அப்பதவியில், அலோக் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications