இளம் தலைமுறையினரை பிடித்து ஆட்டும் செல்ஃபி மோகம்: பெற்றோரே உஷார்!
டெல்லி: செல்ஃபி கலாச்சாரத்தால் இந்தியாவின் இளம் தலைமுறையினர் உணர்ச்சிகளை மதிக்காதவர்களாக மாறி வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எதற்கெடுத்தாலும் செல்ஃபி எடுக்கும் பழக்கம் இளம் தலைமுறையினரிடையே உள்ளது. இந்த செல்ஃபி மோகத்தால் இளம் தலைமுறையினர் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காதவர்களாக ஆகிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அண்மையில் சில இளம் ரசிகர்கள் எடுத்த செல்ஃபியை பார்த்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கூட எரிச்சல் அடைந்தார்.

அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன் அண்மையில் நண்பர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். அவரை பார்த்ததும் அங்கிருந்த இளசுகள் உடனே ஓடிவந்து அவருடன் செல்ஃபி எடுத்தனர். மறைந்த நபருக்கு கொஞ்சம் கூட மரியாதை அளிக்காமல் செல்ஃபி எடுத்தவர்களை பார்க்கையில் வெறுப்பாக உள்ளது என்று அமிதாப் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை
அமிதாப் பச்சன் மட்டும் அல்ல நானும் வெறுப்படைந்துள்ளேன். அண்மையில் வாலிபர் ஒருவர் மருத்துவமனையில் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ள தனது தாயின் அருகே நின்று செல்ஃபி எடுத்து அதை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இது கொஞ்சமும் இரக்கமில்லாத செயல். செல்ஃபியால் இளம் தலைமுறையினர் உணர்வற்றவர்களாகின்றனர் என்று மும்பை நானாவதி மருத்துவமனையில் பணிபுரியும் மனோதத்துவ மருத்துவர் மாதுரி சிங் வருத்தப்பட்டுள்ளார்.

செல்ஃபி
கண்ட நேரங்களில் செல்ஃபி எடுப்பது கலாச்சாரமற்ற செயல். அதை ஒருபோதும் ஊக்குவிக்கவே கூடாது. அதிகமாக செல்ஃபி எடுப்பவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட வேண்டும் என்று டெல்லியில் உள்ள பிஎல்கே மருத்துவமனையில் பணிபுரியும் மூத்த மனோதத்துவ மருத்துவர் சுதர்சனன் தெரிவித்துள்ளார்.

சுயமரியாதை
அதிகமாக செல்ஃபி எடுத்து அதை சமூகவலைதளங்களில் வெளியிடுபவர்கள் தங்களைப் பற்றி மட்டும் அதிகம் நினைப்பவர்கள் என்றும், அவர்களின் சுயமரியாதை மிகவும் குறைவாக இருக்கும் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சமுதாயம்
செல்ஃபியால் இளம் தலைமுறையினர் சமூகத்தை கண்டுகொள்ளாமல் தொழில்நுட்பத்துடன் தான் நேரத்தை செலவிடுகிறார்கள். இதனால் அவர்கள் சமூகத்தில் இருந்து விலகி தனியாகிவிடக்கூடும் என்கிறார் மருத்துவர் பாரிக்.

பிரச்சனை
செல்ஃபியால் அழகாக இல்லாதவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படும். இளம் தலைமுறையினர் உணர்ச்சியற்றவர்களாக ஆகி வருகின்றனர். செல்ஃபி மோகம் பிடித்து இருப்பதால் மனநிலை பாதிக்கப்படும் என்று மருத்துவர் மாதுரி சிங் தெரிவித்துள்ளார்.

நோயாளியுடன் செல்ஃபி
மெக்சிகோவைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் நோயாளியுடன் செல்ஃபி எடுத்து சமூக வலைதளத்தில் போட்டுள்ளார். பணியில் உள்ளேன். ஒரு பெண் இறக்கும் தருவாயில் இருப்பதை பார்த்ததும் செல்ஃபி எடுத்தேன் என்று கூறியுள்ளார் அவர். இதை பார்த்து பலரும் அவரை திட்டித் தீர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசவம்
வெனிசுலாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர் பிரசவ வலியில் துடிக்கும் பெண்ணுடன் செல்ஃபி எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு கூறியதாவது, ஓ பெண்ணே, உங்களுக்கு பிரசவம் பார்த்து குழந்தையை வெளியே எடுப்பேன். ஆனால் முதலில் நான் செல்ஃபி எடுத்துக் கொள்கிறேன் என்றார்.

அறிவுரை
செல்ஃபி மோகம் பிடித்து திரிய வேண்டாம் என்று இளம் தலைமுறையினருக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிவுரை வழங்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.












Click it and Unblock the Notifications