வங்க மொழி திணிப்பு: மெரினா போல மக்களுக்கும் ராணுவத்துக்கும் உணவு வழங்கிக் கொண்டே போராடும் டார்ஜிலிங்
சென்னை மெரினா புரட்சியாளர்களைப் போல வங்க மொழி திணிப்புக்கு எதிராக போராடும் டார்ஜிலிங் மக்கள், போராடிக் கொண்டே சுற்றுலா பயணிகளுக்கும் பாதுகாப்பு படையினரும் உணவு உள்ளிட்டவற்றை வழங்கினர்.
டார்ஜிலிங்: வங்கமொழி கட்டாய திணிப்புக்கு எதிராக போராடி வரும் டார்ஜிலிங் மக்கள் தங்களது போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர் கொடுத்து உணவு சமைத்து வழங்கி நெகிழ வைத்துள்ளனர். இன்னொரு பக்கம் தங்களது போராட்டத்தை ஒடுக்க அனுப்பி வைக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் டார்ஜிலிங் மக்கள் வழங்கிய காட்சிகள் நெகிழ்வைத் தருகின்றன.
அலங்காநல்லூர் வாடிவாசலில் ஜல்லிக்கட்டு புரட்சி மையம் கொண்டிருந்தது.. அது தமிழகம் முழுவதும் வெடித்து கிளம்பி சென்னை மெரினாவில் புரட்சியாக மையம் கொண்டது.
தமிழகமே போர்க்களமாக இருந்தபோதும் சாரை சாரையாக கைகோர்த்த தமிழ் உறவுகளுக்கும் தங்களது போராட்டத்தை கண்காணித்து ஒடுக்க குவிக்கப்பட்ட போலீசாருக்கும் உணவும் குடிநீரும் வழங்கி உபசரித்துக் கொண்டே போராட்டத்தை முன்னெடுத்த வரலாற்றை தமிழகம் கண்டது. தற்போது இதேபோன்ற நிகழ்வு மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மலைப்பகுதிகளில் காண முடிகிறது.

டார்ஜிலிங்கில் எதிர்ப்பு
மேற்கு வங்கத்தில் வங்க மொழியே பள்ளிகளில் கட்டாய பாடம் என முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்தார். ஆனால் கூர்க்கா இன மக்கள் பெரும்பான்மையினராக இருக்கும் டார்ஜிலிங் மலைபிரதேசம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் டார்ஜிலிங்கில் 45 ஆண்டுகளுக்குப் பின்னர் மேற்கு வங்க அமைச்சரவை கூட்டத்தை முதல்வர் மமதா பானர்ஜி கூட்டினார்.

போர்க்களமான டார்ஜிலிங்
கூர்க்கா மக்களின் பிரதிநிதிகள் வசம் இருந்த டார்ஜிலிங் திரிணாமுல் காங்கிரஸ் வசம் வீழ்ந்து கொண்டிருக்கிறது. இப்போது வங்க மொழியும் கட்டாயம் என்ற திணிப்பைக் கண்டித்து நேற்று டார்ஜிலிங் போர்க்களமானது.

ராணுவம் குவிப்பு
கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா இயக்கத்தினர் மமதாவின் அமைச்சரவை கூட்டத்தைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்றனர். இப்போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது. போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. போலீசாரும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை ஒடுக்கினர். வன்முறை நீடிக்காமல் இருக்க ராணுவம் குவிக்கப்பட்டு கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

எப்போதும் போர்க்களம்தான்
இதையடுத்து டார்ஜிலிங்கில் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டன. டார்ஜிலிங் தனிமாநிலம் கோரி போராடும் குழுக்கள் அதிகம் உள்ள மலைபிரதேசம். என்னதான் மலைபிரதேசமாக இருந்தாலும் எப்போதும் போராட்ட கொதிநிலையை கொண்டதாகவே டார்ஜிலிங் இருக்கும்.

சுற்றுலா பயணிகள் தத்தளிப்பு
இப்போது உச்சகட்ட போராட்டம் வெடித்த நிலையில் அங்கு முகாமிட்டிருந்த 10,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் செய்வதறியாது தவித்து போயினர். டார்ஜிலிங்கில் இருந்து அனைவரும் அவசரம் அவசரமாக வெளியேற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. இதனால் சிலிகுரி அருகே உள்ள பக்தோரா விமான நிலையம் இன்று நிரம்பி வழிந்தது.

உணவு உபசரித்து நெகிழ்ச்சி
அதேநேரத்தில் அங்கிருந்து திரும்பாமல் டார்ஜிலிங்கிலேயே தத்தளித்த சுற்றுலா பயணிகளுக்கு போராட்ட குழுவினர் குடிநீர் வழங்கி உணவு சமைத்து போட்டு உதவினர். அவர்களுக்கு மட்டுமா.. தங்களது போராட்டங்களை தடுக்க அனுப்பி வைக்கப்பட்ட ராணுவத்தினருக்கும் போலீசாரும் பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி உபசரித்தனர். இந்த காட்சிகளைக் காணும்போது சென்னை மெரினா புரட்சிக் களமும் நெடுவாசல் போர்க்களமும் கண்ணில் நிழலாடுகின்றன.












Click it and Unblock the Notifications