காவிரி.. மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்!
Recommended Video
டெல்லி: காவிரி தொடர்பாக தமிழகம் தாக்கல் செய்த மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குடன், மத்திய அரசு தாக்கல் செய்த விளக்கம் கேட்பு மனுவையும், இணைத்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு செய்துள்ளது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பிப்ரவரி 16ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், காவிரி பங்கீட்டை செயல்படுத்த ஒரு செயல் திட்டத்தை 6 வாரங்களுக்குள் வகுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
ஆனால் 6 வாரங்கள் கழித்த பிறகும், எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. இதையடுத்து, மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்தது தமிழக அரசு.
அதே நாளில், மத்திய அரசும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கை தாக்கல் செய்தது. அதாவது, சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் தெரிவித்த 'ஸ்கீம்' என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு மத்திய அரசு இந்த மனுவை தாக்கல் செய்தது.
தமிழக அரசின் மனுவை வரும் 9ம் தேதியான, திங்கள்கிழமை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் நேற்று ஒப்புக்கொண்டது. இந்த நிலையில், மத்திய அரசின் விளக்க கேட்பு மனுவையும், விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
இரு மனுக்களையும் இணைத்து 9ம் தேதி விசாரணை நடத்த உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.