4 வயது சிறுவனின் வயிற்றில் உயிரற்ற கரு... ஆபரேஷன் மூலம் அகற்றம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வயிற்று வலியால் துடித்த 4 வயது சிறுவனின் வயிற்றில் உயிர்த் துடிப்பற்ற குழந்தையின் கரு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் சமீபகாலமாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளான். அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், அச்சிறுவனின் வயிற்றுக்குள் உயிரற்ற கரு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கைகள், கால்கள், நகங்கள், பாதி தலை வளர்ந்த நிலையில் சுருண்டு கிடந்த அந்த கருவை, மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றினர். தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் அச்சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
மருத்துவ உலகில் மிகவும் அரிதாக நடக்கும் சில விசித்திரங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
இது தொடர்பாக அச்சிறுவனுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் சிர்ஷேந்தர் கிரி கூறுகையில், "கர்ப்பகாலத்தின் ஆரம்பத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும். இரட்டைக் கருவுறுதல் நடந்து, அதில் ஒரு கரு முட்டை தொப்புள் கொடி வழியாக மற்றொரு கருவிற்குள் நுழைந்து ஒரு குறிப்பிட்ட அளவு வளர்ந்ததும் வளர்ச்சி நின்றுவிடும்.
குழந்தை பிறந்தபின்னர் வயிற்றில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இது கருவுக்குள் கரு எனப்படும். ஐந்து அல்லது ஆறு லட்சம் பெண்களில் ஒருவருக்கு இதுபோன்ற அரிதான கருவுறுதல் நடைபெறும்" என்றார்.