சிக்கி சீரழிந்த சிக்கிம்.. சடலமாக கிடந்த 7 ராணுவ வீரர்கள்! பெரு வெள்ளத்தில் 25 பேர் உயிரிழப்பு
கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் மேக வெடிப்பு காரணமாக திடீா் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்து இருக்கிறது.
சுற்றுலாவுக்கு பெயர்போன மலை மாநிலமான சிக்கிமின் வடக்கு பகுதியில் உள்ள லோனாக் ஏரியில் கடந்த புதன்கிழமை அதிகாலை மேக வெடிப்பு ஏற்பட்டது. அதனால் கொட்டித்தீர்த்த பெரு மழை காரணமாக தீஸ்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சுங்தாங் பகுதியில் உள்ள நீா்மின் திட்ட அணை உடைந்து தலைநகர் கேங்டாக், மங்கன், பாக்யாங், நாம்சி ஆகிய 4 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன.

இந்த நிலையில் வெள்ள பாதிப்புக்கு உள்ளான பா்டாங் என்ற பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 23 ராணுவ வீரா்கள் மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ஒரு வீரர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 7 வீரா்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. காணாமல் போன ராணுவ வீரர்களை தேடும் பணி தொடா்ந்து வருவதாக, முதலமைச்ச பிரேம் சிங் தமாங் தெரிவித்து உள்ளார்.
வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 7 ராணுவ வீரா்களில் 4 போ் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்கள். தீஸ்தா ஆற்றை ஒட்டி அமைந்து இருக்கும் மேற்கு வங்க மாநிலத்தின் டாா்ஜிலிங், ஜல்பைகுரி, கூச்பிகாா் மாவட்டங்களில் பாயும் கிளையாறுகளிலும் உடல்கள் மீட்கப்பட்டு இருக்கின்றன. 7 ராணுவ வீரர்களை சேர்த்து சிக்கிம் வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்து இருக்கிறது.
தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்காக தேசியப் பேரிடா் மீட்புப் படை, விமானப் படை மற்றும் ராணுவ குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. கடுமையாக பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 7,644 போ் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள். வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து 2,413 போ் மீட்கப்பட்டு உள்ளனா். வெள்ளம் பாதித்த பாக்யாங் மாவட்டத்தில் உள்ள ராங்போ பகுதியில் முதலமைச்சர் தமாங் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தாா்.
அப்போது பேசிய அவர், "பாதிப்பு காரணமாக தொலைதொடர்பு சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டு உள்ளதால், மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடைபட்டு உள்ளது. வெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மீட்புப் பணிகள், நிவாரணத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம், நிவாரண முகாம்களில் உள்ளவா்களுக்கு தலா ரூ.2,000 நிவாரணம் வழங்கப்படும்." என்று அவர் கூறினார்.
சிக்கிமின் லாசென், சுங்தாங், லாசுங் பகுதிகளில் சுமாா் 3,000 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்து வருகிறார்கள். அவா்களை மீட்கும் பணியை ராணுவம் தொடங்க உள்ளதாக அம்மாநில தலைமைச் செயலாளா் வி.பி.பாதக் தெரிவித்து உள்ளார். சிக்கிம் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக, மாநில பேரிடா் நிவாரண நிதிக்கு ரூ.44.8 கோடியை வழங்க மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஒப்புதல் வழங்கியுள்ளார். சிக்கிமில் வெள்ள பாதிப்புகளை மதிப்பிட மத்தியக் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. சிக்கிம் சென்று ஆய்வு மேற்கொள்ளும் இக்குழுவின் அறிக்கையை தொடர்ந்து கூடுதல் நிதியை மத்திய அரசு வழங்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications