குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டால் தேர்தலில் போட்டியிட தடை: தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத்
டெல்லி: குறைந்தபட்சம் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கத்தக்க குற்ற வழக்குகளை சந்திப்பவர்கள் மீது, தேர்தல் தேதி அறிவிப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்பு, நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு இருந்தால், அத்தகையவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்திடம் யோசனை தெரிவித்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் கூறியுள்ளார்.
அந்த யோசனையை சட்ட ஆணையத்துக்கு சட்ட அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
குற்றச்சாட்டுகள் பதிவு
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்பு, நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு இருந்தால், அத்தகையவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக தனது சிபாரிசுகளில் இதுபற்றியும் சட்ட ஆணையம் சிபாரிசு செய்யும்.
அரசியல் உள்நோக்கம்
இந்த யோசனை, தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காகத்தான், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்பு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே தடை பொருந்தும் என்று கூறியுள்ளோம். ஏனென்றால், தேர்தல் நெருங்கும்போது, அரசியல் உள்நோக்கத்துடன் எதிரிகள் மீது குற்ற வழக்குகள் தொடர வாய்ப்பு இருக்கிறது
பொய்யான தகவல்கள்
வேட்புமனுவுடன் தாக்கல் செய்யும் பிரமாண பத்திரத்தில் தகவல்களை மறைத்தாலோ, பொய்யான தகவல்களை தெரிவித்தாலோ அபராதத்துடன் ஆறு மாத ஜெயில் தண்டனை விதிக்க தற்போதைய சட்டம் வகை செய்கிறது.
2 ஆண்டுகள் தண்டனை
இந்த தண்டனையை இரண்டு ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என்று யோசனை தெரிவித்துள்ளோம். மேலும், இதன் அடிப்படையில், அவரை தகுதி இழப்பு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளோம்.
கிரிமினல்களை தடுப்பது
அரசியல், கிரிமினல்மயம் ஆவதை தடுப்பதுதான் எந்த கோணத்தில் பார்த்தாலும் முன்னுரிமை பணியாக இருக்கும். நாங்களும் அதற்குத்தான் முன்னுரிமை அளிக்கிறோம். பொது வாழ்க்கையில் தூய்மையை நோக்கி பாடுபட்டு வருகிறோம்.
தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம்
எந்த அமைப்பும் அதிக அதிகாரம் கேட்பதை நான் தவறு என்று சொல்ல மாட்டேன். அதுபோல், தேர்தல் கமிஷன் போன்ற ஒழுங்குமுறை அமைப்புக்கும் அதிக அதிகாரம் அளித்தால், அது தனது பணியை திறம்பட செய்ய வழிவகுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
பல் இல்லாத அமைப்பா?
தேர்தல் கமிஷனை ‘பல் இல்லாத அமைப்பு‘ என்று கூறுவதை ஏற்க முடியாது. ஏனென்றால் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். குற்றச்சாட்டு கூறப்பட்டவர் விளக்கம் அளிக்க 48 மணி நேரம் அவகாசம் அளிக்கிறோம். அதை நீட்டிக்க கோரினால், மேலும் 48 மணி நேரம் அவகாசம் அளிக்கிறோம். மொத்தத்தில், 96 மணி நேரத்தில், அந்த பிரச்சினையை ‘பைசல்‘ செய்கிறோம்.
96 மணி நேரத்தில்...
எந்த அமைப்பாவது, 96 மணி நேரத்தில் ‘பைசல்‘ செய்வதை பார்த்து இருக்கிறீர்களா? வெறுப்பை தூண்டும் பேச்சுகளை பொறுத்தவரை, அப்படி பேசுபவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்படி உத்தரவிட்டுள்ளோம்.