சபாநாயகர் நிராகரித்த பின்னர் மீண்டும் ராஜினாமா செய்த 13 சீமாந்திரா எம்.பிக்கள்
ஹைதராபாத்: தெலுங்கானாவை எதிர்த்து ராஜினாமா செய்வதாக 13 சீமாந்திரா எம்.பி.க்கள் கொடுத்த கடிதத்தை சபாநாயகர் மீராகுமார் நிராகரித்த நிலையில் மீண்டும் ராஜினாமா செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திராவைச் சேர்ந்த 13 எம்.பி.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களில் எஸ்.பி.ஒய். ரெட்டி, ஹர்சகுமார், சாய் பிரதாப், ராஜகோபால், அனந்தவெங்கடராமி ரெட்டி, அருண்குமார், மாகுண்ட சீனிவாசலு ரெட்டி, சாம்பசிவ ராவ், சப்பம்ஹரி, பாப்பிராஜு கனுமுரு ஆகிய 10 பேரும் காங்கிரசை சேர்ந்தவர்கள்.
ஜெகன்மோகன் ரெட்டி, ராஜ்மோகன் ரெட்டி இருவரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசைச் சேர்ந்தவர்கள். கொகைல்ல நாராயணா என்பவர் தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்தவர்.

சபாநாயகர் நிராகரிப்பு
சபாநாயகர் மீராகுமார் இந்த 13 எம்.பி.க்களின் ராஜினாமா கடிதங்களை கடந்த சில நாட்களாக ஆய்வு செய்து வந்தார். நேற்று அவர் 13 எம்.பி.க்களின் ராஜினாமாவை ஏற்க இயலாது என்று நிராகரித்துவிட்டார்.

7 எம்.பிக்கள் நேரில் சந்திப்பு
இதைத் தொடர்ந்து சபாநாயகர் மீராகுமாரை 7 எம்.பி.க்கள் நேரில் சந்தித்து தங்கள் ராஜினாமாவை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் மீராகுமார் அவர்களை சமரசம் செய்து அனுப்பினார்.

மீண்டும் ராஜினாமா
இதனால் அதிருப்தி அடைந்த சீமாந்திரா பகுதி எம்.பி.க்கள் 13 பேரும் மீண்டும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

வழக்கு தொடர முடிவு
இதேபோல் சபாநாயகர் மீராகுமாரின் முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். நாங்கள் முறைப்படி சபாநாயகருக்கு ராஜினாமா கடிதம் கொடுத்தோம். ஆனால் அதனை சபாநாயகர் நிராகரித்து இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. எனவே இதை எதிர்த்து வழக்கு தொடருவோம் என்று அக்கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் ராஜ்மோகன் ரெட்டி, எஸ்.பி.ஒய். ரெட்டி ஆகியோர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications