டான்ஸ் ஷோ வெறி... ஜெயிலில் இருந்து ரிலீசானதும் பாட்டியைக் கொன்று நகையைத் திருடிய சிறுவன்!
டெல்லி: டான்ஸ் ஷோவில் பங்கேற்பதற்காக டெல்லியில் மூதாட்டியைக் கொலை செய்து அவரது நகைகளைத் திருடிச் சென்ற 17 வயது சிறுவனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
சமீபத்தில் டெல்லி பி.கே.தத் காலனியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் முதல் மாடியில் வசித்து வந்த மிதிலேஷ் ஜெயின் என்ற 65 வயது பெண் சமீபத்தில் தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். கணவரை இழந்து தனிமையில் வசித்து வந்த மிதிலேஷ் இயற்கையான முறையில் மரணமடைந்ததாக போலீஸ் தரப்பு கூறியது.

ஆனால், வீட்டில் நகைகள் மற்றும் பணம் திருட்டு போயிருப்பதாக அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து கொள்ளைச் சம்பவத்தின் போது அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் 17 வயது சிறுவன் மீது போலீசாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. தலைமறைவாக இருந்த அச்சிறுவனை பரிதாபாத்தில் உள்ள அவனது இல்லத்தில் இன்று போலீசார் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அச்சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டான்ஸ் ஷோ ஒன்றில் பங்கேற்க பணம் தேவைப்பட்டதாகவும், அதற்காகவே மிதிலேஷைக் கொலை செய்து அவரது நகைகளைத் திருடிச் சென்றதாகவும் அச்சிறுவன் தெரிவித்துள்ளான்.
அது மட்டுமின்றி ஏற்கனவே டான்ஸ் ஷோவில் பங்கேற்பதற்காக கடந்தாண்டு 13 வயது சிறுவனைத் தன் தோழியோடு சேர்ந்து கொலை செய்துள்ளான் இச்சிறுவன். அதற்காக சிறை சென்றிருந்த அச்சிறுவன் சமீபத்தில் தான் ரிலீஸ் ஆகியுள்ளான்.
சிறையில் மனம் திருந்தாத அச்சிறுவன் வெளியில் வந்ததும், டான்ஸ் மீது இருந்த தீராதக் காதலால் மீண்டும் கொலை செய்து போலீசிடம் சிக்கியுள்ளான்.
கொலை செய்யப்பட்ட மூதாட்டி இன்னும் சில தினங்களில் சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டுள்ளார். ஆனால், அதற்குள்ளாக அவர் கொலை செய்யப்பட்டு விட்டார் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications