டெல்லியில் ஓடும் வேனுக்குள் கோஷ்டி மோதல்: திகார் சிறைக் கைதிகள் 2 பேர் பலி!
டெல்லி: டெல்லியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட போது ஓடும் வேனுக்குள் திகார் சிறைக் கைதிகள் கோஷ்டியாக மோதிக் கொண்டதில் 2 பேர் பலியாகியுள்ளனர்.
டெல்லி திகார் சிறையில் இருந்து ரோகினியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக 9 கைதிகளை ஒரு வேனில் சிறை அதிகாரிகள் 2 பேர் ஏற்றிச் சென்றனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு மாலை 4.30 மணி அளவில் மீண்டும் சிறையில் அடைப்பதற்காக வேனில் கொண்டு வந்தனர்.
அந்த வேன் திகார் சிறைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, வேனுக்குள் இருந்த கைதிகள் இரு கோஷ்டிகளாக பிரிந்து ஒருவருக்கொருவர் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இவர்களில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாதுகாப்புக்கு சென்ற 2 சிறை அதிகாரிகளும் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த வேனை நேரடியாக அவுட்டர் டெல்லியின் மங்கலபுரி பகுதியில் உள்ள பகவான் மகாவீர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிறை அதிகாரிகள் படுகாயம் அடைந்த கைதிகளை சிகிச்சைக்காக அனுமதித்தபோது அவர்களில் 2 பேர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்ற 5 கைதிகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications