விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி காற்று மாசு.. என்ன செய்யப்போகிறது கெஜ்ரிவால் அரசு?
டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருவது கெஜ்ரிவால் அரசுக்கு சவாலாக மாறியுள்ளது.
டெல்லி : தலைநகரான டெல்லியில் கடந்த ஒரு வாரமாக காற்று மாசுபாடு அதிகரித்து உள்ளது. இதனால் மாசுபாட்டைக் குறைக்க டெல்லி அரசு பல திட்டங்களை செயல்படுத்த உள்ளது.
டெல்லியின் காற்றுமாசுபாடு அளவு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலங்களில் பனியுடன் கூடிய மாசுபட்ட பனிப்புகை டெல்லியில் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு 12ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளன.
டெல்லியில் கடந்த ஆண்டும் இதே நிலை நிலவியது. இதனால் ஒற்றைப்படை இலக்க கார்களை ஒரு நாளும், இரட்டை படை இலக்க எண்களை ஒரு நாளும் என மாற்றி மாற்றி இயக்க மாநில அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் மீண்டும் டெல்லி மற்றும் பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் குளிர் காலம் ஆரம்பித்து உள்ளது.

ஏன் காற்று மாசுபாடு?
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வறண்ட காற்றும், பாகிஸ்தான் பகுதியில் இருந்து பனிப்புகையும் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாநிலங்களில் வீசும். ஏற்கனவே டெல்லியில் தொழிற்சாலைகள், வாகனப் புகைகளால் வெளியேற்றப்பட்ட நச்சுப் பொருட்களும், பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் விவசாயப் பயன்பாட்டிற்காக வேர்களை வெட்டி எரித்து தயார் படுத்தும் முறையில் ஏற்படும் புகையும் பனிக் காற்றோடு கலந்து மெல்லிய பழுப்பு நிறப் படலமாக பனிப்புகை இருக்கும்.

நண்பகலிலும் தொடரும் பனிப்புகை
காற்று மாசுபாட்டுக் குறியீட்டின் புள்ளிகள் 480க்கும் அதிகமான அபாயகரமான புள்ளிகளை எட்டி உள்ளது. இதனால் நண்பகல் தாண்டியும் டெல்லி சாலைகளில் பயணிக்க முடியாத நிலையும், மூச்சுவிட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையைக் கருத்தில் கொண்டு டெல்லியில் பள்ளிகளுக்கு 12ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

ஏன் நடவடிக்கை இல்லை?
இந்நிலையில் காற்று மாசு இந்த நிலையை எட்டியும் ஏன் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கேட்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் டெல்லி, ஹரியானா, பஞ்சாப் அரசின் தலைமை செயலாளர்களுக்கும், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவசூழல் கட்டுப்பாடு, சுகாதாரம் , நெடுஞ்சாலைத்துறை செயலாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மாநில அரசின் பிரச்னை
இதுகுறித்து மத்தியமைச்சர் ஹர்ஷவர்த்தனிடம் கேட்டபோது, காற்று மாசுபாட்டிற்கு மத்திய அரசு சர்ஜிக்கல் நடவடிக்கை எல்லாம் எடுக்க முடியாது. இது மாநில அரசின் விவகாரம் அவர்கள் தான் எதாவது செய்ய வேண்டும் என்று பதிலளித்து இருக்கிறார். இதனால், டெல்லியின் கெஜ்ரிவால் அரசு மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டிய நிலையில் உள்ளது.

பேருந்துக் கட்டணம் இலவசம்
முதற்கட்டமாக மீண்டும் ஒற்றை, இரட்டை படை இலக்கக் கார்களை மாற்றி மாற்றி இயக்கும் திட்டத்தை நவம்பர் 13ம் தேதியில் இருந்து 17ம் தேதி வரை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. அதனால் சாலைப்போக்குவரத்து குறைக்கப்படும். அந்த சமயங்களில் பேருந்துகள் இலவசமாக இயக்கப்படும் என்றும் டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கெல்லாட் தெரிவித்து உள்ளார்.

புது வாகனங்களுக்கு அனுமதி இல்லை
மேலும், அத்தியாவசியப் பொருட்களை கொண்டுவரும் வாகனங்கள் தவிர வேறு வாகனங்கள் டெல்லிக்குள் நுழையக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. தொழிற்சாலைகள், அனல் மின் நிலையங்கள் ஆகியற்றில் குறைவான கழிவுகளை வெளியிட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications