ராஜினாமா செய்த கையோடு அதை வாபஸ் பெற்ற பேடியின் தேர்தல் பொறுப்பாளர் டான்டன்
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் பாஜக தேசிய நிர்வாக குழு உறுப்பினரும், பாஜகவின் முதல்வர் வேட்பாளரான கிரண் பேடியின் தேர்தல் பொறுப்பாளருமான நரேந்திர டான்டன் கட்சியில் இருந்து விலகினார். ஆனால் அவர் தனது ராஜினாமாவை தற்போது வாபஸ் பெற்றுள்ளார்.
பாஜக நிர்வாக குழு உறுப்பினராகவும், டெல்லி தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளரான கிரண் பேடியின் தேர்தல் பொறுப்பாளராகவும் இருந்தவர் நரேந்திர டான்டன். டெல்லி சட்டசபை தேர்தலுக்கு 5 நாட்களே உள்ள நிலையில் டான்டன் கட்சியில் இருந்து விலகுவதாக இன்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார்.

பேடி
கிரண் பேடியின் அதிகாரப் பேச்சை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. அவர் சர்வாதிகாரி போன்று செயல்படுகிறார். பேடியின் உதவியாளர்கள் என்னை அவமானப்படுத்திவிட்டனர். இது குறித்து மேலிடத்தில் தெரிவித்தும் பலனில்லை. அதனால் இனியும் அவருடன் சேர்ந்து பணியாற்ற முடியாது என்று டான்டன் இன்று காலை தெரிவித்தார்.

பாதிப்பு இல்லை
நரேந்திர டான்டன் ஒன்றும் பெரிய ஆள் இல்லை. மேலும் அவரது செயல்பாடும் பாராட்டும்விதத்தில் இல்லை. அதனால் அவர் கட்சியில் இருந்து விலகியுள்ளதால் தேர்தல் பணி பாதிக்காது என்று பாஜக தெரிவித்தது.

ராஜினாமா
நரேந்திர டான்டன் கட்சியில் இருந்து விலகுவதாக ஏற்கனவே மூன்று முறை கடிதம் அளித்து அதை வாபஸ் பெற்றவர். இந்நிலையில் தற்போதும் தனது ராஜினாமாவை வாபஸ் பெறுவதாக டான்டன் அறிவித்துள்ளார்.

மன்னிப்பு
தேர்தல் நெருங்கும் வேளையில் ராஜினாமா செய்வதாக கூறி சர்ச்சையை கிளப்பியதற்கு மன்னிப்பு கேட்பேன் என்று டான்டன் தெரிவித்துள்ளார்.

டான்டன்
டான்டன் முன்னதாக கட்சிக்கு தொல்லை கொடுத்துள்ளார். அவர் 2013ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமார்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ரஜினி அபிக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்தார் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் ஷங்கர் கபூர் தெரிவித்தார்.

டெல்லி பல்கலைக்கழகம்
1990களின் இறுதியில் டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்தவர் நரேந்திர டான்டன். பின்னர் பாஜகவில் சேர்ந்த அவர் கட்சியின் டெல்லி நகர செயலாளராக உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications