டெல்லி மக்களே, ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள்: கேட்பது மம்தா பானர்ஜி
கொல்கத்தா: டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு வாக்களிக்குமாறு மேற்கு வங்க முதல்வரும், திரினமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளது அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய உள்ள நிலையில், மம்தா தனது டிவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் கூறியுள்ளதாவது: டெல்லி தேர்தல் 7ம்தேதி நடைபெறுகிறது. டெல்லியிலுள்ள அனைவருக்கும் எனது வேண்டுகோள் என்னவென்றால், ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள் என்பதுதான். நாட்டின் இப்போதைய முக்கிய தேவைக்காகவும், டெல்லியின் வளர்ச்சிக்காகவும் ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள். இவ்வாறு மம்தா கூறியுள்ளார்.
பாஜக-மம்தா நடுவே கடும் பனிப்போர் நிலவிவருகிறது. எனவே எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பார்முலாவை கையில் எடுத்துள்ளார் மம்தா. டெல்லி தேர்தலை மோடி ஒரு கவுரவ பிரச்சினையாக கையில் எடுத்துள்ளார். எனவே அவருக்கு ஷாக் கொடுத்து பாஜகவுக்கு பதிலடி கொடுக்க துடிக்கிறார் மம்தா. மம்தாவுக்கு டெல்லியில் பெரிய அளவுக்கு வாக்கு வங்கியில்லை என்றபோதிலும், மம்தாவின் ஆதரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.