ஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு.. பெற்ற மகளே தாயை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற கொடூரம்
ஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை மகளே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஸியாபாத்: ஓரினச்சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை, கம்பியால் அடித்துக் கொன்ற மகளையும், அவரது கூட்டாளியான ஆசிரியையும் காஸியாபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் கவி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி பெயர் புஷ்பா தேவி. இவர்களுக்கு ராஷ்மி ராணா என்ற 21 வயது கல்லூரி செல்லும் மகள் உள்ளார்.

ராஷ்மிக்கு நிஷா என்ற ஆசிரியையுடன் ஓரினச் சேர்க்கை உறவு இருந்துள்ளது. இது தொடர்பாக தெரிய வந்ததும் புஷ்பா இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் புஷ்பாவை இரும்புக் கம்பியால் தலையில் பலமாகத் தாக்கியுள்ளனர்.
இதில், பலத்த காயமடைந்த புஷ்பா பரிதாபமாக உயிரிழந்தார். தாயைக் கொலை செய்த ராஷ்மி, நிஷாவுடன் தலைமறைவானார்.
இந்தக் கொலை தொடர்பாக சதீஷ்குமார் போலீசில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, காஸியாபாத் ரயில் நிலையத்தில் ராஷ்மியையும், நிஷாவையும் போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் இருவரும், புஷ்பாவைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.
இது தொடர்பாக போலீசாரிடம் ராஷ்மி அளித்த வாக்குமூலத்தில், 'தான் சமீபகாலமாக நிஷாவுடன் சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும், ஆனால் அதற்கு புஷ்பா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும், அதனால் தங்களது உறவுக்கு தடையாக இருந்த தாயை அடித்துக் கொலை செய்ததாகவும்’ அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொலை சம்பவம் நடந்தபோது, சதீஷ்குமார் வீட்டில் இல்லை எனக் கூறப்படுகிறது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள ராஷ்மியும், நிஷாவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஓரினச்சேர்க்கை உறவுக்காக பெற்ற மகளே தாயை அடித்துக் கொலை செய்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications