தேர்தல் வாக்குறுதிப்படி டெல்லியில் 50% மின் கட்டணம் குறைப்பு: கேஜ்ரிவால் அரசு அதிரடி! !
டெல்லி: டெல்லியில் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மின்சார கட்டணம் 50% குறைக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.
துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், முதல்வர் கேஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முதல் 400 யூனிட்டுகள் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கான கட்டணத்தில் 50% குறைக்கப்படும் என்றும் இது மார்ச் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக மின்சார கட்டணம் பாதியாக குறைக்கப்படும் என்று அறிவித்து இருந்தது. அதன் அடிப்படையில் மின்சார கட்டணம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 90% டெல்லிவாசிகள் பயன்பெறுவர்.
அதேபோல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதத்துக்கு 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும் என்றும் ஆம் ஆத்மி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தது. முந்தைய ஆம் ஆத்மி அரசு இலவச தண்ணீர் திட்டத்தை அறிமுகம் செய்தது. ஆனால் ஆட்சி முடிந்தவுடன் இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.