மத்திய அரசுக்கு டெல்லி மக்கள் போட்ட மார்க்!: மோடி அரசின் ஹனிமூன் காலம் முடிந்ததா?
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக பெற்றுள்ள தோல்வி மத்திய அரசுக்கு எதிரான மக்களின் மன நிலையையே காண்பிக்கிறது. மோடி அரசின் ஹனிமூன் காலம் முடிந்துவிட்டதை தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன.
டெல்லியில் கடந்த ஆண்டு நடந்த மக்களவை பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள ஏழு தொகுதிகளையும் சிந்தாமல், சிதறாமல் அள்ளியது பாஜக. ஆனால் சட்டசபை தேர்தலில் இப்படி ஒரு மோசமான தோல்வியை அக்கட்சி தழுவியுள்ளது. அதுவும் நாடு முழுவதும் செல்வாக்கில்லாத ஒரு குட்டி கட்சியான ஆம் ஆத்மியிடம்.

டெல்லியில் கடந்த ஆண்டு பாஜக அமோக வெற்றி பெற காரணம், பாஜக மற்றும் மோடி மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கைதான். ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வோம், கடந்த கால ஊழல்களை கண்டுபிடித்து குற்றவாளிகளை சிறையில் தள்ளுவோம், விலைவாசியை குறைப்போம், பாலாறும், தேனாறும் ஓடச் செய்வோம் என்பது போன்ற மோடியின் பிரச்சாரத்தை மக்கள் ரசித்தனர். நம்பினர். அதன் விளைவுதான் அந்த வெற்றி.
ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, அவர் அரசின் நடவடிக்கைகளை பக்கத்திலேயே இருந்து உற்று கவனிக்கும் வாய்ப்பு பிற மாநில மக்களைவிட டெல்லிவாசிகளுக்குதான் வாய்த்தது. அப்போதுதான் தெரிந்தது, மோடி தேர்தல் நேரத்தில் உதிர்த்தவை வெறும் அலங்கார வாக்குறுதிகள்தானே தவிர, உண்மையில்லை என்பது.
இதுவரை கருப்பு பணத்தை மீட்கவில்லை, ஊழல் வழக்கில் யாரையும் சிறையில் தள்ளவில்லை, விலைவாசியை குறைக்கவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிந்தது. இன்னும் சொல்லப்போனால், காஸ் சிலிண்டருக்கு நேரடி மானியம் என்ற பெயரில் மக்களை காஸ் ஏஜென்சிகள் வாசலில் சென்று நிற்க வைத்ததையும், மானியங்களை குறைத்து மக்களின் பாக்கெட்டை ஓட்டையாக்கியதையும் மக்கள் வெறுப்புடனே பார்த்தனர். நடுத்தரவர்க்கத்திற்கு எந்த ஒரு நேரடி பயனும் இன்னும் கிடைக்கவில்லை.
கருப்பு பண பிரச்சினை கன்னித்தீவு கதையாக சென்றதையும் உன்னிப்பாக கவனித்தனர் டெல்லிவாலாக்கள். இதைவிட உச்சமாக, தினசரி ஒரு சாமியார், ஏதாவது ஒரு சர்ச்சை கருத்துக்களை கூறி, மத உணர்வுகளை புண்படுத்துவதையும், அதை மோடி தடுக்காததையும் கவனித்த மக்கள், இம்முறை ஆம் ஆத்மிக்கே நமது வாக்கு.. அவர்களையும் சோதித்து பார்த்துவிடுவோம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
மத்திய அரசு இனியாவது தனது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால், நாடு முழுவதும் பாஜகவுக்கும், காங்கிரஸ் நிலை ஏற்படும் என்ற எச்சரிக்கை மணியே டெல்லி தேர்தல் முடிவு.












Click it and Unblock the Notifications