ஹவாலா ஏஜென்டிடம் இருந்த ரூ.50 லட்சம் பறிமுதல் - வங்கிக் கணக்கு விவரத்தையும் துருவுகிறது போலீஸ்
டெல்லி : இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், பரிமாற்றம் செய்யப்பட்ட 50 லட்சம் ரூபாயை ஹவாலா ஏஜென்ட் நரேசிடம் இருந்து டெல்லி போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற சுமார் 50 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்ட வழக்கில், இது வரை 1 கோடியே 80 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 17ம் தேதி இரவு டெல்லி தெற்கு பகுதியில் பிடிபட்ட புரோக்கர் சுகேஷ் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் பணத்துடன் டெல்லி குற்றப்பிரிவு போலீசிடம் பிடிபட்டார். இவர் அளித்த தகவலின்படி லஞ்ச பேர வழக்கில் டிடிவி தினரகன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஹவாலா இடைத்தரகர் நரேஷ் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். நரேஷிடம் போலீஸ் விசாரணை நடத்தி வரும் நிலையில் இன்று காலையில் அவர் மறைத்து வைத்திருந்த 50 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பணம் இடைத்தரகர் நரேஷிடம் அளிப்பதற்காக கொண்டு வரப்பட்டதாக சொல்லப்படுகிறது. பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் தினகரனின் வங்கிக்கணக்கு விவரங்களை தெரிவிக்கும் படியும் போலீசார் நரேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications