டெல்லி பலாத்கார வழக்கில் உபேர் டாக்சி டிரைவர் குற்றவாளி என நிரூபிப்பு, வெள்ளி அன்று தண்டனை அறிவிப்பு
டெல்லி: கடந்த ஆண்டு டெல்லியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் உபேர் டிரைவர் சிவ் குமார் யாதவ் குற்றவாளி என்று டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் 25 வயது இளம்பெண் உபேர் டாக்சி டிரைவர் சிவ் குமார் யாதவால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதையடுத்து யாதவ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் டெல்லியில் உபேர் டாக்சிகளுக்கு அரசு தடை விதித்து உத்தரவிட்டது.
பலாத்கார வழக்கு டெல்லியில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி காவேரி பவேஜா முன்பு கடந்த ஜனவரி மாதம் 15ம் தேதி முதல் நடந்து வருகிறது. வழக்கு விசாரணையின்போது யாதவ் பலமுறை நீதிமன்றத்தில் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் யாதவ் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக இன்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவருக்கான தண்டனை வரும் 23ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் கூறியுள்ளது.
இளம்பெண்ணை டாக்சியில் வைத்து கொடூரமாக பலாத்காரம் செய்து தாக்கிய யாதவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.