மகள் திருமண செலவுக்காக பணம் எடுக்க வங்கிக்கு சென்ற தாய் கூட்ட நெரிசலில் சிக்கி பலி
பஞ்சாப் மாநிலத்தில் பணம் எடுக்க வங்கிக்கு சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார்.
லூதியானா: மகள் திருமணத்திற்காக பணம் எடுக்க வங்கிக்கு சென்ற தாய் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகினார். இந்த சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வசிக்கும் ஆஷா ராணி என் பெண் தனது மகளின் திருமண செலவுக்காக பணம் எடுக்க பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு சென்றுள்ளார். அங்கு பணம் எடுப்பதற்காக அதிக அளவில் கூட்டம் கூடியிருந்தது. இந்தக் கூட்டத்தோடு கூட்டமாக ஆஷா ராணியும் நின்றிருக்கிறார். அப்போது, கூட்ட நெரிசல் அதிகமானதால் பெரிய ரகளை ஒன்றும் ஏற்பட்டுள்ளது.
இந்த ரகளையின் போது, கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், ரகளையை கட்டுப்படுத்தவும் வங்கியின் காவலாளி முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஆஷா ராணி தள்ளிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, கூட்ட நெரிச்சலை ஒழுங்குப்படுத்திய வங்கி காவலாளி தள்ளிவிட்டதால்தான் ஆஷா ராணி காயமடைந்து மரணம் அடைந்தார் என்று உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், அவர்கள் போலீசிலும் புகார் செய்துள்ளனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு புலனாய்வு விசாரணை நடைபெற்று வருகிறது.
பழைய நோட்டை மாற்ற வரிசையின் நின்றும், வங்கியில் உள்ள தங்களுடைய பணத்தை எடுக்க கூட்டத்தில் அகப்பட்டும் ஏற்கனவே 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.