ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம்… 6வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்
ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்கட்சியினர் 6வது நாளாக இன்றும் முடக்கினர்.
டெல்லி: நாடாளுமன்றத்தில் ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் பூதாகாரமாக உருவெடுத்துள்ளது. இந்தப் பிரச்சனை குறித்து எதிர்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து கேள்வி கேட்டு கோஷம் எழுப்பி வருவதால் 6வது நாளாக இன்றும் லோக் சபா மற்றும் ராஜ்ய சபா ஆகிய இரு அவைகளும் முடக்கப்பட்டன.
கடந்த 16ம் தேதி நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. அன்று முதல் எதிர்கட்சிகள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது விவகாரத்தை கையில் எடுத்து நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு மவுனமாகவே இருந்து வருகிறது. நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதற்கும் மோடி அமைதியாகவே இருக்கிறார். இதனால் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று காலை வழக்கம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கின. அப்போது, எதிர்கட்சிகள் ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்க மறுத்ததால் இருக்கையில் இருந்து எழுந்து காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடது சாரிகள் அவையின் நடுப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சபாநாயகர் அவர்களை அமைதிப்படுத்த முயன்றார். பின்னர், லோக் சபா 12 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். குளிர்கால கூட்டத்தொடர் துவங்கி 6 நாட்களாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தை முடங்கியுள்ளனர்.
இதே போன்று மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடிய போது தொடர்ந்து எதிர்கட்சிகள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டதால் 2 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.