ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம்.. எதிர்கட்சிகள் கடும் அமளி.. ராஜ்ய சபா 6வது நாளாக முடக்கம்
ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் தொடர்பாக ராஜ்ய சபாவில் எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டது.
டெல்லி: ராஜ்ய சபாவில் ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் பூதாகாரமாக உருவெடுத்துள்ளது. இந்தப் பிரச்சனை குறித்து எதிர்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து கேள்வி கேட்டு கோஷம் எழுப்பி வருவதால் இன்றும் ராஜ்ய சபாவை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டு அவை நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 16ம் தேதி நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாள் அன்றே 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது விவகாரத்தை கடுமையாக கண்டித்து காங்கிரஸ் கட்சி பேசியது. மேலும், தொடர்ந்து ராஜ்ய சபாவில் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி தொடர் அமளியில் ராஜ்ய சபா எம்பிக்கள் செய்து வருகின்றனர். ஆனால் இதுகுறித்து, ஆளும் பாஜக அரசு எந்த விவாதத்தையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் ராஜ்ய சபா அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு ராஜ்ய சபா தொடங்கியது. அப்போது, எதிர்கட்சிகள் ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனை சபா நாயகர் ஏற்க மறுத்தார். இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இருக்கையில் இருந்து எழுந்து சபாநாயகர் இருக்கையின் அருகில் வந்து கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சபாநாயகர் ராஜ்ய சபாவை மதியம் 12 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார். மீண்டும் அவை கூடிய போது, எதிர்கட்சிகளும் மீண்டும் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் 3வது முறையாக பிற்பகல் 2 மணிக்கு அவை கூடிய போது, எதிர்கட்சிகளின் அமளி தொடர்ந்து நடைபெற்றது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் சபாநாயகர் அவையை நாளை வரை ஒத்தி வைத்தி வைத்தார்.