மோடி எங்கே.. மோடி எங்கே.. எதிர்க்கட்சியினர் தொடர் அமளி.. ராஜ்ய சபா நாளை வரை ஒத்தி வைப்பு
மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் பிரதமர் மோடி ராஜ்ய சபாவிற்கு வராததால் எதிர்க்கட்சியினர் கடும் அமளி ஈடுபட்டனர்.
டெல்லி: ராஜ்ய சபாவில் இன்று நடைபெற்ற ரூபாய் நோட்டு செல்லாது தொடர்பான விவாதத்தில் மோடி தொடர்ந்து பங்கேற்கவில்லை. இதனை கண்டித்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் ராஜ்ய சபா நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டது.
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை இந்தியாவில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கடந்த 16ம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர் காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. ராஜ்ய சபாவில் தொடங்கிய முதல் நாளில் இருந்தே, அவையில் ரூபாய் நோட்டுக்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும் மோடி அவைக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு ராஜ்ய சபா கூடியது. அவை தொடங்கிய உடன் எதிர்க்கட்சியினர் ரூபாய் நோட்டுக் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று அமளியில் ஈடுப்பட்டனர். அமளியை கட்டுப்படுத்த முடியாததால் சபாநாயகர் 12 மணி வரை அவையை ஒத்தி வைத்தார்.
பின்னர், 12 மணிக்கு அவை கூடிய போது, பிரதமர் மோடி வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து ராஜ்ய சபாவில் ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த சபாநாயகர் அனுமதி அளித்தார். இந்த விவாதத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்து உரையாற்றினார். தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் விவாதத்தில் பங்கேற்று பேசினார். இதனைத் தொடர்ந்து உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது.
உணவு இடைவேளைக்கு பின்னர் பிரதமர் மோடி ராஜ்ய சபாவிற்கு வரவில்லை. இதனால் எதிர்க்கட்சியினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். மோடி எங்கே மோடி எங்கே என்று தொடர்ந்து கோஷமிட்டனர். மோடி இருந்தால்தான் விவாதத்தை தொடர்ந்து நடத்த முடியும் என்றும் எதிர்க்கட்சியினர் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இதற்கு நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பிரதமர் மோடிதான் பதில் கொடுப்பார் என்றும் தொடர்ந்து விவாதம் நடத்தவும் கூறினார். ஆனால் எதிர்க்கட்சியினர் ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, நாளை வரை ராஜ்ய சபாவை சபாநாயகர் குரியன் ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications