பெங்களூருவில் முறைகேடாக பழைய நோட்டு மாற்றம்.. 2 ஆர்பிஐ அதிகாரிகள் அதிரடி கைது
செல்லாத பழைய ரூபாய் நோட்டுக்களை முறைகேடாக மாற்றம் செய்த 2 ஆர்பிஐ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு: செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை முறைகேடாக மாற்றம் செய்த பெங்களூரு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் 2 பேரை கைது செய்து சிபிஐ விசாரித்து வருகிறது.
கடந்த மாதம் 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. பின்னர், புதிய 2000 ரூபாய் நோட்டையும் அது வெளியிட்டது. கறுப்புப் பணத்தை ஒழிக்கவே இதனை செய்வதாக அறிவித்த மோடி அரசு, ஒரு வாரத்திற்கு 24 ஆயிரம் ரூபாய் மட்டுமே வங்கியில் இருந்து பொதுமக்கள் பணத்தை எடுக்க முடியும் என்று விதிமுறைகளையும் விதித்தது. சாதாரண மக்கள் பணம் எடுக்க கெடுபிடி காண்பித்த மத்திய அரசால் பெரும் பணக்காரர்கள் மூட்டை மூட்டையாக பழைய நோட்டுக்களை புதிய 2000 ரூபாய் நோட்டுக்களாக மாற்றுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், மத்தியில் ஆளும் மோடி அரசிற்கு கடும் நெருக்கடிகள் உருவாகின.

இதனையடுத்து, பல கோடிஸ்வரர்களின் வீடுகளை வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, கட்டுக்கட்டாக புதிய ரூபாய் நோட்டுக்கள் இருப்பதையும், அவை அனைத்தும் கணக்கில் காட்டப்படாத பணம் என்பதையும் கண்டெடுத்தனர். இதனால், இவர்கள் கையில் மட்டும் எப்படி கட்டுக்கட்டாக புதிய ரூபாய் நோட்டுக்கள் கிடைத்தது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினார்கள். மேலும், இந்தப் பணத்தை மாற்றிக் கொடுக்கும் ரிசர்வ் வங்கி மற்றும் இதர வங்கிகள் மேல் மக்கள் சந்தேகம் எழுப்பினார்கள்.
இந்நிலையில், கடந்த வாரம் ரூ.1.50 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை முறைகேடாக மாற்ற முயன்றதாக பெங்களூரு ரிசர்வ் வங்கி மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அதிகாரியை பணியிடை நீக்கம் செய்த ரிசர்வ் வங்கி, விசாரணைக்கும் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று பழைய செல்லாத ரூபாய் நோட்டுக்களை முறைகேடாக மாற்றப்பட்ட புகாரில் பெங்களூரு ரிசர்வ் வங்கியின் மூத்த சிறப்பு உதவியாளர் மற்றும் சிறப்பு உதவியாளர்கள் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். செல்லாத நோட்டுக்களை மாற்றியது தொடர்பாக சிபிஐ இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications