உலகத்திலேயே டென்மார்க் மக்கள்தான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்காங்களாம்!
மும்பை: கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள் கூட இன்றைக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தேடி அலைகின்றனர். இதிலிருந்தே பணம் மட்டுமே மகிழ்ச்சிக்கான காரணி அல்ல என்பதை அறிந்து கொள்ளலாம்.
உலகத்திலேயே மகிழ்ச்சியான நாடு எது என்ற ஆய்வு பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வில் டென்மார்க் முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியாவில் பணம் இருப்பவர்கள் வேறு எதையாவது தேடி அலைந்து கொண்டிருப்பார்கள். அதனால்தான் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் இந்தியா ரொம்பவே பின் தங்கியுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் டென்மார்க் முதலிடமும், சுவிட்சர்லாந்து இரண்டாம் இடமும், ஐஸ்லாந்து மூன்றாம் இடமும், நார்வே நான்காம் இடமும், ஃபின்லாந்து ஐந்தாம் இடமும் பிடித்துள்ளன. இதில் கவனிக்கப்பட வேண்டியது இந்த நாடுகள் எல்லாம் ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்லாமல் ஒன்றுக்கொன்று அருகருகே உள்ள நாடுகள்.
எது மகிழ்ச்சி
மகிழ்ச்சி என்பது எப்படி கணக்கிடப்படுகிறது. முக்கியமாக பணம் சந்தோஷத்துக்கு அடிப்படை அல்ல. அதனால் பணம் கணக்கெடுப்பில் இல்லை. பாதுகாப்பு, சமூகத்தில் ஏற்றத்தாழ்வற்ற நிலை, சமூக உறவு, சுதந்திரமாக வாழ்தல், லஞ்ச லாவண்யமற்ற சமூகம், நேர்மைத்தன்மை, தன்னிறைவு பெறும் உள்ளூர் உற்பத்திகள், மக்களின் நோக்கங்களை நிறைவேற்றும் அரசு ஆகியவை மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு காரணிகளாக உள்ளன.
டென்மார்க் முதலிடம்
இந்த அடிப்படையில் டென்மார்க் முதலிடம் பிடித்துள்ளது. அங்குள்ள மக்கள் பணத்துக்காக மட்டும் வாழ்வதில்லை. பணம் ஒரு பொருளாதார கருவி. அவ்வளவே. அதையும் மீறி நண்பர்கள், உறவினர்களுடன் இணக்கமாக வாழ்வது, தீவிரவாதமில்லாத மனநிலை, அன்பு செலுத்துதல், பிறரை மதித்தல், அனைவரையும் சமமாக ஏற்றுக்கொள்ளும் மனநிலை, பிறருக்கு உதவுதல், வாரத்தில் ஒரு முறையேனும் நண்பர்கள் அல்லது உறவினர் வீடுகளுக்குச் சென்று மகிழ்ச்சியடைதல் என பல காரணங்கள் அடுக்கப்படுகின்றன.
சின்னச் சின்ன சந்தோசங்கள்
குறிப்பாக மற்ற நாடுகளை ஒப்பிடும்போது அவர்கள் குறைந்த நேரமே உழைக்கின்றனர். அவர்களின் வாழ்க்கை குறியீடு போல 'ஹைக்' என்ற டென்மார்க் வார்த்தைப் பயன்படுத்தப்படுகிறது. நாம் ஜாலி என்று சொல்வது போல, ஹைக் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அந்த வார்த்தையின் முழுமையான அர்த்தத்தை தெளிவுபடுத்துவது சிரமம் என்றாலும்கூட இப்படி சொல்லலாம். அதாவது சின்ன சின்ன சந்தோஷங்களை கூட உணர்வுப்பூர்வமாக அனுபவிப்பது என்று அறியப்படலாம்.
ஐ.நா ஆய்வு என்ன சொல்கிறது
ஐ.நா.வின் 'சஸ்டெய்னபிள் டெவலப்மென்ட் சொலூஷன்ஸ் நெட்வொர்க்' அமைப்பு மகிழ்ச்சிகரமான உலக நாடுகள் பட்டியலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. இதற்காக 158 நாடுகளில் ஆய்வு செய்துள்ளது. அதன்படி ஒரு நாட்டின் தனிநபர் வருமானம், ஆரோக்கியம், ஆயுட்காலம், சமூக ஆதரவு, சுதந்திரம் போன்ற மகிழ்ச்சிக்கான விஷயங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தை முந்திய டென்மார்க்
இதில் டென்மார்க் நாடுதான் உலகிலேயே மிகச்சிறந்த மகிழ்ச்சியான நாடாக தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு ஐ.நா வெளியிட்டுள்ள பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தில் இருந்தது. டென்மார்க்கை அடுத்து 2வது இடத்தில் சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகள் முறையே 3, 4, 5வது இடத்தில் உள்ளன.
இந்தியாவின் நிலை
ஐ.நா. வெளியிட்டுள்ள பட்டியலில் வறுமையில் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள சோமாலியா நாடு கூட 76வது இடத்தில் உள்ளது. சீனா (83), பாகிஸ்தான் (92), ஈரான் (105), பாலஸ்தீனம் (108), வங்கதேசம் (110) இடங்களை பிடித்துள்ளன. ஆனால், மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா பின்தங்கி உள்ளது. இந்தியா 118வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 117-வது இந்தியா இருந்தது.
மகிழ்ச்சி குறைவான நாடுகள்
இந்த பட்டியலில் கடந்த ஆண்டை விட மகிழ்ச்சி குறைந்த நாடுகளாக வெனிசுலா, சவுதி அரேபியா, எகிப்து, ஏமன், போஸ் வானா, இந்தியா ஆகிய 10 நாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மக்கள் மகிழ்ச்சியாக இருக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளும் முக்கிய காரணமாக இருக் கின்றன.