எல்லையில் வாலாட்டும் சீனா... நீளும் பேச்சுவார்த்தை... ஏன் தேப்சாங் இந்தியாவுக்கு முக்கியம்!!
லடாக்: இந்தியா சீன எல்லையில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டில் தேப்சாங்க் என்ற இடத்தில் இன்னும் பதட்டம் நிலவி வருகிறது. இதுகுறித்து இன்று கிழக்கு லடாக்கில் தவ்லட் பெக் ஒல்டி என்ற இடத்தில் இருதரப்பு மூத்த ராணுவ ஜெனரல்கள் இடையிலான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் மேஜர் ஜெனரல்கள் இருதரப்பிலும் கலந்து கொண்டுள்ளனர். கடந்த மே மாதத்தில் இருந்து இந்தியா, சீனா இடையே எல்லையில் பதட்டம் நிலவி வருகிறது. இதற்கு முன்னதாக கமாண்டர்கள் அளவிலான உயர்மட்ட கூட்டம் ஐந்து முறை நடந்தது. அதற்குப் பின்னர் இன்றைய கூட்டம் நடந்து வருகிறது.
இந்தியா தரப்பில் இந்த கூட்டத்திற்கு மேஜர் ஜெனரல் அபிஜித் பபட் தலைமை தாங்குகிறார். தேப்சாங் பகுதியில் தற்போது பதட்டம் நிலவி வருகிறது. அங்கு சீனர்கள் தரப்பில் 15000 ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இது மீண்டும் இந்தியா சீனா இடையே எல்லையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இடம் தான் எல்லைக்கட்டுப்பாட்டு கோடாக அமைந்து இருநாடுகளின் எல்லைகளைப் பிரிக்கிறது. இந்த இடத்தின் பெரும்பகுதிகளை 1962ல் இருந்து சீனா ஆக்கிரமித்து வைத்து இருக்கிறது. லடாக்கின் மேற்குப் பகுதி இந்தியாவிடம் இருக்கிறது. அக்சய் சின் கிழக்குப் பகுதியில் இருக்கும் நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்து வைத்து இருக்கிறது. இது இந்தியாவின் நிலப்பகுதி. ஆனால், சீனா ஏற்கனவே ஆக்கிரமித்து தன்னகத்தே வைத்துக் கொண்டுள்ளது.
2013, 2014 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து இந்த இடத்தை ஆக்கிரமித்து, பின்னர் இருதரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் பின் வாங்கியது. தற்போது மீண்டும் இந்த இடத்தில் சீனா தனது படைகளை நிறுத்திக் கொண்டு இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. ராணுவ டேங்குகள், பீரங்கி துப்பாக்கிகள் ஆகியவற்றை சீனா நிறுத்தியுள்ளது.
இந்தியாவும் பதிலடி கொடுக்கும் வகையில் படைகளை நிறுத்தியுள்ளது. நிலத்தில் இருந்து 16000 அடி உயரத்தில் இருக்கும் இந்த இடத்தில் இருந்து சீனாவின் படைகளை வாபஸ் பெற வைப்பதற்கான பேச்சுவார்த்தை இன்று நடந்து வருகிறது.

இருநாடுகளுக்கு இடையிலான பபர் சோன் எனப்படும் இந்த இடத்தில் இருநாட்டு ராணுவ வீரர்களும் ரோந்து செல்வது வழக்கம். இருவரும் இந்த இடத்தை மீறி அடுத்தவர்களின் எல்லைக்குள் நுழையக் கூடாது என்பது ஒப்பந்தம். ஆனால், சீனா ஒவ்வொரு முறையும் குளிர்காலத்தை பயன்படுத்தி தனது பகுதிகளை இந்தியா நோக்கி நகர்த்தி வருகிறது. இதுவரைக்கும் பாங்காங் ஏரிப்பகுதியில் உள்ள ரோந்து புள்ளிகளான 14, 15, 17A ஆகியவை பற்றியும் பேசப்பட்டு வந்தது. ஆனால் பேச்சுவார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டது. புதிதாக பாங்காங் ஏரிப்பகுதியில் பிங்கர் பாயின்ட் 5, 8 ஆகியவற்றில் மீண்டும் சீனா தனது படைகளை நிறுத்தியதுதான் இதற்குக் காரணம்.
கிழக்கு லடாக்கில் தேப்சாங் அமைந்து இருப்பதால் மட்டும் இன்றி, இங்கு காரகோரம் என்ற இடத்தில் இந்தியா தனது விமான தளத்தை அமைத்து இருப்பதால் இந்த இடம் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சீனா இதற்கு அருகேதான் மேற்கில் நெடுஞ்சாலையை அமைத்துள்ளது. இது திபெத் மற்றும் ஜின்ஜியாங் பகுதியை இணைக்கிறது. எனவே சீனா எப்போது இந்த இடத்தை ஆக்ரமிக்க குறிவைத்துக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications