கர்நாடகா அணைகளை திடீரென ஹெலிகாப்டரில் பறந்து ஆய்வு செய்த தேவகவுடா!
மைசூரு: கர்நாடக அணைகளின் நீர் நிலைமைகளை முன்னாள் பிரதமர் தேவகவுடா திடீரென ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார்.
உச்சநீதிமன்ற உத்தரவுபடி கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. இதனை கண்டித்து கர்நாடகம் முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

மாண்டியாவில் 7-வது நாளாக நேற்றும் போராட்டம் நீடித்தது. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா நேற்று ஹெலிகாப்டர் மூலம் கே.ஆர்.எஸ்., கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளை பார்வையிட்டார்.
அப்போது அணைகளின் நீர்ப்பாசன பகுதிகளையும் அவர் பார்வையிட்டார். பின்னர் கே.ஆர்.எஸ். அணை முன்பு செய்தியாளர்களிடம் பேசிய தேவகவுடா, உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து கர்நாடக அரசு நடப்பது அவசியமாகும். அது மாநில அரசின் கடமையும் கூட.
காவிரி பிரச்சினை தொடர்பாக நான் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த பிரச்சினையில் தலையிட்டு சுமுகமாக தீர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன். கர்நாடகத்திற்கு வாதாடும் மூத்த வழக்கறிஞர் நாரிமனுடன் இந்த பிரச்சினை குறித்து விவாதித்துள்ளேன். அவர் சரியான முறையில் வாதாடி வருகிறார். அவர் இங்குள்ள நீர் நிலைமைகளை ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து பிரதமருக்கு வழங்க உள்ளதாக கூறியுள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications