"முஸ்லிம் வாக்குகள் ஒன்றும் எங்களுக்கு தேவையில்லை!" பாஜக தலைவர் திலீப் கோஷ் சர்ச்சை பேச்சு
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு ஒரு வாரம் கூட இல்லாத நிலையில், அங்குத் தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. இதற்கிடையே தங்களுக்கு முஸ்லீம் வாக்காளர்கள் யாரும் தேவையில்லை எனக் கூறியுள்ள அம்மாநில பாஜக மூத்த தலைவர் திலீப் கோஷ், பாஜக தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்காத வரை முஸ்லீம் வேட்பாளர்களை தங்கள் கட்சி களமிறக்காது எனவும் கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் அரசியல் களம் உக்கிரமாக இருக்கிறது. ஒரு பக்கம் 4வது முறையாக வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் திரிணாமுல் காங்கிரஸ் களமிறங்குகிறது. அதேநேரம் கடந்த முறை அசுர வளர்ச்சி அடைந்த பாஜக, இந்த முறை அதை அதிகரித்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறது. இதனால் அங்குப் போட்டி மிகக் கடுமையாக உள்ளது.

தேவையில்லை
பாஜகவின் தேசிய தலைவர்கள் அமித் ஷா தொடங்கி அனைவரும் அங்கு இறங்கி வேலை செய்து வருகிறார்கள். இதற்கிடையே முஸ்லீம் வாக்குகள் தங்களுக்குத் தேவையில்லை என்று சொல்லி மேற்கு வங்க அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளார் பாஜக மூத்த தலைவர் திலீப் கோஷ். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முஸ்லிம் சமூகத்தினரிடம் வாக்கு கேட்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என அவர் வெளிப்படையாகப் பேசியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தி
மேற்கு வங்க மக்கள் தொகையில் சுமார் 27 சதவீதம் இருக்கும் முஸ்லிம் சமூகத்தினர், அங்கு ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாகக் கருதப்படுகிறார்கள். ஆனால், இந்தியா டுடேவுக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலில் பேசிய திலீப் கோஷ், முஸ்லிம் வாக்குகள் பாஜகவுக்கு வராது என்பதால் அவர்களிடம் வாக்கு கேட்பது வீண் வேலை என்று குறிப்பிட்டுள்ளார்.
எதுக்கு பத்திரிக்கை
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "பொதுவாகவே நமக்கு ஓட்டுப் போடாதவர்களிடம் நாம் ஏன் ஓட்டு கேட்க வேண்டும்? அதாவது ஊரில் ஒரு பேச்சு இருக்கும். பொதுவாக ஊர் பக்கம் நம்ம பொண்ணு கல்யாணத்துக்கு வரமாட்டாங்கன்னு தெரிஞ்சா, அவர்களுக்கு எதற்குப் பத்திரிகை வைக்கணும்? எதற்குக் காசைச் செலவு பண்ணி ஆள் அனுப்பிக் கூப்பிட வேண்டும்? எனச் சொல்வார்கள். அதுபோலத் தான் எங்களுக்கு வாக்களிக்க விருப்பமில்லையா.. சரி ஓகே வாக்களிக்க வேண்டாம்.! அவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க முடிவு செய்யும் நாளில் தான் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்" என்றும் அவர் தெரிவித்தார்.
பாஜக ஆடும் கேம்
மேற்கு வங்கத்தில் முழுமையாக இந்து வாக்குகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதிலேயே பாஜக கவனம் செலுத்தி வருகிறது. கடந்த தேர்தல்களில் 55 சதவீத இந்து வாக்குகளைப் பெற்ற பாஜக, இந்த முறை அதனை 65 சதவீதமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "முஸ்லிம்கள் அனைவரும் திரிணாமுல் காங்கிரஸுக்கே வாக்களிக்கிறார்களா என்றால் இல்லை; கடந்த முறை ஐஎஸ்எஃப் கட்சி ஒரு தொகுதியில் வென்றதே அதற்குச் சாட்சி. ஆனால், எங்களது இலக்கு மீதமுள்ள 10 சதவீத இந்து வாக்குகளைப் பெற்று ஆட்டத்தை முடிப்பது தான்" என்றும் அவர் தெரிவித்தார்.
மேற்கு வங்க அரசியலில் மம்தா பானர்ஜியின் 'முஸ்லிம் வாக்கு வங்கி' அரசியலை உடைக்க, திலீப் கோஷ் கையில் எடுத்திருக்கும் இந்த 'நேரடித் தாக்குதல்' அங்குத் தேர்தல் களத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது..












Click it and Unblock the Notifications