சசியுடன் 'ரிசார்ட்' எம்.எல்.ஏக்கள் சந்திப்பு.. "பரபரப்பான" போட்டோவை வெளியிட வலியுறுத்த திட்டம்!
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்திக்கப் போகும் 18 எம்எல்ஏக்களை ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுத்த புகைப்படத்தை வெளியிட அனுமதி கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குடகு : குடகு ரிசார்ட்டில் தங்கியிருக்கும் எம்எல்ஏக்கள் இன்று சசிகலாவை சந்திக்கும் போது ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிக்கை பெற்ற போது எடுத்த புகைப்படத்தை வெளியிட அனுமதி கோர உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் மற்றும் முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணை என்று பரபரப்பின் கூடாரமாக மாறியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இன்று நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் விசாரணையை நோக்கி பத்திரிக்கையாளர்கள் படையெடுப்பு இடமாக மாறியுள்ளது ஹைகோர்ட்.
இந்நிலையில் குடகு விடுதியில் தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், தினகரனுடன் சேர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை இன்று சந்திக்கின்றனர். இது குறித்து கடந்த 3 தினங்களாகவே தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ தெரிவித்து வருகிறார்.
நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பதாகவும் 20ம் தேதி பேடிங்டன் விடுதியை விட்டு வெளியே சென்று விடுவோம் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று எம்எல்ஏக்கள் இன்று பெங்களூரு செல்ல உள்ளனர். எனினும் இத்தனை பேரையும் சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதி அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே சசிகலாவை சந்திக்கும் போது அனைவரும் கேள்வி எழுப்பும் ஜெயலலிதா சிகிச்சைக்கான புகைப்படத்தை வெளியிட அனுமதி கோர உள்ளதாக தெரிகிறது. மக்கள் மற்றும் தொண்டர்களின் ஆதரவைப் பெறுவதற்காக புகைப்படத்தை வெளியிட்டு நன்மதிப்பை பெற்றுவிடலாம் என்று இந்த நடவடிக்கையை எடுக்க அவர்கள் விருப்பம் தெரிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.