அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக மனு.. ஹேமந்த் சோரனை கைவிட்டது ஜார்க்கண்ட் நீதிமன்றம்!
ராஞ்சி: அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தொடர்ந்த மனுவை ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா+காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன், சட்ட விரோதமாக சுரங்கம் குத்தகை எடுத்ததாகவும், அதன் மூலம் பண பலன்களை அடைந்ததாகவும் அமலாக்கத்துறை கடந்த 2022ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்திருந்தது. இதனையடுத்து அங்கு எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக தொடர் போராட்டங்களை நடத்தி ஹேமந்த் சோரனுக்கு நெருக்கடி கொடுத்தது.

ஒரு பக்கம் எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் தீவிரமடைய மறுபக்கம், அமலாக்கத்துறையும் தனது பிடியை இறுக்கியது. வழக்கு தொடர்பாக நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் மீது சம்மன்களை அனுப்பி தள்ளியது அமலாக்கத்துறை. தொடர்ந்து 7 முறை சம்மன் அனுப்பி பார்த்த அமலாக்கத்துறை கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி அதிரடியாக அவரது வீட்டில் நுழைந்து விசாரணையை தொடங்கியது. சுமார் 8 மணி நேர விசாரணைக்கு பின்னர் மீண்டும் 2 சம்மன்கள் அனுப்பப்பட்டன.
இதற்கிடையில் சோரன் ஜனவரி 27ம் தேதி டெல்லி சென்று சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். டெல்லி சென்ற சோரனை லாக் செய்ய திட்டமிட்டு, அவர் தங்கியிருந்த வீட்டில் அதிரடி ரெய்டு மேற்கொண்டது அமலாக்கத்துறை. ஆனால், வீட்டில் பணியாளர்களை தவிர யாரும் இல்லை. எனவே ஏமாற்றமடைந்த அமலாக்கத்துறை உடனடியாக விமான நிலையங்களை உஷார்படுத்தியது. சோரன் கார் மூலமாக டெல்லியிலிருந்து ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சென்று சேர்ந்தார்.
இந்த டிவிஸ்டை எதிர்பார்க்காத அமலாக்கத்துறை சோரனை ஜனவரி மாதம் 31ம் தேதி கைது செய்தது. தனது ராஜினாமா கடிதத்தை அளிக்க புறப்பட்ட சோரனை, அமலாக்கத்துறை தனது காரிலேயே அழைத்து சென்று, ராஜினாமா கடிதத்தை கொடுக்க செய்திருக்கிறது.
இந்நிலையில் இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
லோக்சபா தேர்தல் நடைபெறும் சூழலில் அமலாக்கத்துறை இந்தியா கூட்டணி தலைவர்களை கைது செய்திருந்தது நாடு முழுவதும் பெரும் விவாதமாக வெடித்தது.
குறிப்பாக, பாஜகவுடன் நெருங்கிய தொடர்பை வைத்துள்ள ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது சொத்துக்குவிப்பு வழக்கு இருக்கிறது, அதேபோல மகாராஷ்டிராவில் ஆட்சியிலிருக்கும் சிவசேனா-பாஜக கூட்டணியின் துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் மீது பிரதமர் நரேந்திர மோடியே நேடியாக ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார்.
இவர்களையெல்லாம் விசாரணைக்கு அழைக்காத, சம்மன் அனுப்பாத அமலாக்கத்துறை, இந்தியா கூட்டணியில் இருக்கும் தலைவர்களை மட்டும் குறிவைப்பதாக எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மீது கடும் விமர்சனத்தை வைத்து வருகின்றன.
இந்நிலையில் ஹேமந்த் சோரனின் மனு மீது இன்று ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. வழக்கின் விசாரணை பிப்.28ம் தேதி முடிவடைந்த நிலையில், தீர்ப்பை நீதிமன்றம் ஒத்தி வைத்திருந்தது. இதனையடுத்து இன்று நீதிபதி எஸ்.சந்திரசேகர், நீதிபதி நவநீத் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை வழங்கியுள்ளது.
தீர்ப்பில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக ஹேமந்த் சோரன் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications