சொத்துக்குவிப்பு வழக்கில் ஹரியானா மாஜி முதல்வர் சவுதாலா ஜாமீன் ரத்து.. மீண்டும் சிறைவாசம்
சண்டீகர்: சொத்துக் குவிப்பு வழக்கில், வழங்கிய ஜாமீன் பிணையை திரும்ப பெறுவதாக பிணை கொடுத்த நபர் கூறியதையடுத்து, ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அவரின் ஆதரவாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
ஹரியானா முன்னாள் முதல்வரும் இந்திய தேசிய லோக் தளம் (ஐ.என்.எல்.டி.) தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா, ஐந்து முறை முதல்வராக இருந்த பெருமைக்குரியவர்.

இந்நிலையில், 1999-2000ல் அவர் முதல்வராக இருந்தபோது ஆசிரியர் நியமனத்தில், பணம் பெற்றுக்கொண்டு வேண்டியவர்களுக்கு வேலை நியமனக் கடிதம் கொடுத்ததாக ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சிங் சவுதாலா மற்றும் 53 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஊழல்களால் அவர் சொத்து குவித்ததும் அம்பலமானது.
வழக்கை விசாரித்த டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம், கடந்த ஆண்டு அவருக்கும் அவரது மகனுக்கும் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து திகார் சிறையில் அடைக்கப்பட்ட சவுதாலா ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.
81 வயதாகும் சவுதாலா தனது வயதையும் ஒரு காரணமாக காண்பித்து ஜாமீன் கேட்டிருந்தார். அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அப்போது, சுர்ஜித் சிங் என்பவர், சவுதாலாவுக்காக பிணை கொடுத்திருந்தார்.
இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக, பிணையை வாபஸ் பெற விரும்புவதாக சுர்ஜித் சிங், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இன்று இவ்விசாரணை நடந்தபோது சவுதாலாவும் கோர்ட்டில் ஆஜராகினார். சுர்ஜித் சிங் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், ஜாமீனை ரத்து செய்து சவுதாலாவை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து உடனடியாக சவுதாலா கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications