பிரதமர் மோடி இன்று அயோத்தி பயணம்- 18 லட்சம் தீபங்களின் தீப உற்சவத்தில் பங்கேற்பு- பலத்த பாதுகாப்பு!
அயோத்தி: பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி செல்கிறார். இதனையொட்டி அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் 18 லட்சம் தீபங்களின் தீப உற்சவத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
ம.பியில் கோர விபத்து.. தீபாவளிக்கு ஆசையாக ஊர் திரும்பிய 15 பேர் பலி.. பிரதமர் நிவாரணம் அறிவிப்பு
சட்டசபை தேர்தலை எதிர்கொண்டுள்ள குஜராத் மாநிலத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி அண்மையில் தொடங்கி வைத்தார். இதனையடுத்து உத்தரகாண்ட் மாநிலத்துக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். அங்கும் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட புனித தலங்களுக்கும் சென்று பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். கேதார்நாத்தில் ஆதி சங்கராச்சாரியாரின் நினைவிடத்தையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். இன்று மாலை 5 மணியளவில் பகவான் ஸ்ரீராம்லாலா விராஜ்மானுக்கு பூஜை செய்து பிரதமர் மோடி வழிபடுகிறார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திரத்தை பிரதமர் மோடி ஆய்வு செய்ய உள்ளார்
அயோத்தியில் இன்று மாலை 5.45 மணியளவில் ஸ்ரீராமருக்கு ராஜ்யாபிஷேகத்தை பிரதமர் மோடி மேற்கொள்கிறார். இதன் பின் மாலை 6.30 மணியளவில் சரயு நதியின் புதிய படித்துறையில் நடைபெறும் பிரம்மாண்டமான ஆரத்தியை அவர் பார்வையிடுகிறார். அத்துடன் சரயு நதி படித்துறையில் பிரம்மாண்டமான தீப உற்சவ கொண்டாட்டத்தையம் பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்.
கடந்த 6 ஆண்டுகளாக நடைபெறும் தீப உற்சவத்தில் முதல் முதலாக பிரதமர் மோடி நேரடியாக கலந்து கொள்கிறார். 18 லட்சம் தீபங்கள் இந்த நிகழ்ச்சியில் ஏற்றப்பட உள்ளன.
இன்றைய தீப உற்சவத்தின் போது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு நடன வடிவிலான 11 ராம்லீலா மற்றும் 5 அனிமேஷன் வடிவிலான அலங்கார வாகனங்கள் இடம்பெறும். சரயு நதியில் கரைகளில் பிரம்மாண்டமான இசை லேசர் காட்சிகளுடன் முப்பரிமாண ஹோலோ கிராபிக்ஸ் காட்சிகளையும் பிரதமர் பார்வையிடுகிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அயோத்தி நகரின் அனைத்து பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.