ஒருவர் செத்துப் போனது கூட தெரியாமல் மனு செய்யும் அரசு வக்கீல்... ஜெ. வழக்கில் திமுக புகார்

பெங்களூர் தனிக் கோர்ட்டில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிபதி ஜான் மைக்கல் டிகுணா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது குற்றம் சாட்டபட்டவர்கள் நேரில் ஆஜராகாமல் விலக்கு அளிக்கக் கோரி அவர்களின் வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவுக்கு அரசு வழக்கறிஞர் பவானிசிங் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து அந்தக் கோரிக்கையை நீதிபதி ஏற்று கொண்டார்.
அதைத் தொடர்ந்து திமுகபொதுச்செயலாளர் க.அன்பழகன் சார்பில் வழக்கறிஞரும், தர்மபுரி எம்.பி.யுமான இரா.தாமரைசெல்வன், வழக்கறிஞர்கள் சரவணன், பாலாஜி சிங் ஆகியோர் புதிய மனு தாக்கல் செய்தனர்.
அதில்,
அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங், பிப்ரவரி 3ம் தேதி தாக்கல் செய்த மனுவில் தமிழக போலீசார் கடந்த 1996ம் ஆண்டு வழக்கில் முதல் மற்றும் இரண்டாவது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளவர்களின் வீடுகளில் சோதனை செய்தபோது பறிமுதல் செய்த 1,116 கிலோ வெள்ளி பொருட்களை வி.பாஸ்கரன் என்பவரிடம் உள்ளதாகவும், அதை நீதிமன்றத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியிருந்தார்.
அரசு வழக்கறிஞர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ள வி.பாஸ்கரன் என்பவர் கடந்த 2013 டிசம்பர் 3ம் தேதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு காலமாகி விட்டார். இந்த உண்மையை மறைத்து இறந்துபோன ஒருவரிடமிருந்து வெள்ளி பொருட்களை கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளது நீதிமன்றத்திற்கு கொடுத்துள்ள தவறான தகவலாகும். வழக்கை காலதாமதம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் செயல்பட்டுள்ளதாக தெரிகிறது.
இவ்வழக்கை இதற்கு முன் விசாரணை நடத்திய நீதிபதி பாலகிருஷ்ணா முன் அரசு மற்றும் குற்றவாளிகள் தரப்பு சாட்சிகள் விசாரணை முடிந்தபின், 2013 ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 16ம் தேதி வரை குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதம் செய்தனர். ஆகஸ்ட் 23 முதல் 26ம் தேதி வரை அரசு வழக்கறிஞர் வாதம் செய்தார். அந்த காலகட்டத்தில் வி.பாஸ்கரன் உயிருடன் இருந்தார்.
அப்போது வெள்ளி பொருட்களை கொண்டு வர வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் ஏன் மனு தாக்கல் செய்யவில்லை. வி.பாஸ்கரன் என்பவர் இறந்துபோன தகவல் அரசு வழக்கறிஞருக்கு எப்படி தெரியாமல் போனது.
நீதிபதி பாலகிருஷ்ணா முன் 4 நாட்கள் வாதம் செய்த அரசு வழக்கறிஞர் வழக்கு தொடர்பான ஆவணங்களை படிக்காமலும், முழுமையாக தெரிந்து கொள்ளாமல் வாதம் செய்தாரா? அல்லது வழக்கை தாமதப்படுத்தும் நோக்கத்தில் செயல்படுகிறாரா? என்ற சந்தேகம் வருகிறது.
ஆகவே, வெள்ளி பொருட்களை கொண்டு வர வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் அல்லது நீதிமன்றத்திற்கு உகந்ததாக கருதப்படும் உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் அன்பழகன் கூறியுள்ளார்.
இது குறித்து என்ன சொல்கிறீர்கள் என்று அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி கேட்டபோது, எனக்கு முழு விவரம் தெரியாது. தகவல் பெற்று தெரிவிக்கிறேன் என்றார்.
அதை தொடர்ந்து தி.மு.க. தாக்கல் செய்த மனு மீது ஆட்சேபனை மனுவை பிப்ரவரி 6ம் தேதி அதாவது நாளை தாக்கல் செய்யும்படி அரசு மற்றும் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications