திமுகவை அவமானப்படுத்திய டெல்லி வாலாக்களுக்கு மூக்கறுப்பு... கழக சேலையில் கெத்து காட்டிய கனிமொழி!
2ஜி வழக்கின் தீர்ப்பு எப்படி வருமோ என்று திமுகவினர் பதைபதைப்பில் இருந்த நேரத்தில் டெல்லி நீதிமன்றத்தில் காலையில் தீர்ப்பை கேட்பதற்காக வந்திருந்த கனிமொழி கருப்பு சிவப்பு சேலையில் வந்திருந்தார்.
Recommended Video
டெல்லி : ஒரு புறம் ஆர்கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மற்றொரு புறம் 2ஜி வழக்கின் தீர்ப்பு என்று திமுகவிற்கு இன்று நெருக்கடியான நாளாக இருந்தது. தீர்ப்பு எப்படி வருமோ என்று கட்சியினர் பதைபதைப்பில் இருக்க நம்பிக்கையோடு காலையில் நீதிமன்றம் வரும் போதே கருப்பு, சிவப்பு சேலையில் கலக்கலாக வந்தார் கழகக் கண்மணி கனிமொழி.
2ஜி வழக்கின் தீர்ப்பு டிசம்பர் மாதத்தில் வருவது திமுகவை அழிக்க வரும் சுனாமி பேரழிவு என்று கலக்கத்தில் இருந்தனர் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும். பழமை வாய்ந்த கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த அ.ராசா மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது இமாலய ஊழல் நடந்ததாக தேசிய ஊடகங்கள் அங்கலாய்த்தன.
திமுகவினரின் மிகப்பெரிய ஊழல் என்று வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டன. அதோடு திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி நீரா ராடியாவுடன் தொலைபேசியில் உரையாடியது என்று ஒரு ஆடியோவை வெளியிட்டு, இந்த ஊழல் சதிக்கு காரணமாக இருந்தார் என்று கனிமொழியின் பெயரும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டது.
கலக்கலாக வந்த கனிமொழி
2ஜி வழக்கிற்காக டெல்லி திஹார் சிறையிலும் அடைக்கப்பட்டார் கனிமொழி. வலிகள் வேதனைகள் என்று கடந்த 6 ஆண்டுகள் கடினமானதாகவே சென்று கொண்டிருந்த கனிமொழிக்கு இன்றைய தீர்ப்பு நிம்மதியளித்துள்ளது. இன்று காலையில் வழக்கின் தீர்ப்புக்காக டெல்லி சிபிஐ நீதிமன்றம் வந்தவர் சிவப்பு நிறத்தில் கருப்பு பார்டர் வைத்த சேலையை அணிந்திருந்தார்.
திமுகவை நிமிரச் செய்த தீர்ப்பு
திமுகவின் கருப்பு, சிவப்பு நிறத்திலேயே உடையணிந்து வந்திருந்த கனிமொழி வழக்கில் இருந்து விடுதலையாகி வெளியே வந்து தொண்டர்களைப் பார்த்து வெற்றிக் குறி காட்டி விட்டு புறப்பட்டார். நீதி நிலைநாட்டப்பட்டது, நியாயம் வென்று விட்டது என்பதை சொல்லி மகிழ்ந்து வரும் கனிமொழி தான் திமுகவின் அடையாளம் என்பதை உணர்த்துவதாகவே இன்று அவர் அணிந்திருந்த உடை இருந்தது.
அரவிந்தனின் காஸ்ட்யூம் சேஞ்ச்
கனிமொழியுடன் அவருடைய கணவர் அரவிந்தனும் உடன் வந்திருந்தார். கனிமொழி நீதிமன்றத்திற்குள்ளே செல்லும் போதும் சரி வெளியே வந்த பின்னரும் சரி கனிமொழிக்கு பக்கத்திலேயே இருந்தார் அரவிந்தன். காலையில் காவி நிற பைஜாமா அணிந்திருந்தவர், வழக்கின் தீர்ப்பு வந்த பிறகு அவரும் கருப்பு பைஜாமாவிற்கு மாறினார்.
கருணாநிதியின் மஞ்சள் துண்டு
மகள் கனிமொழிக்கு நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கப் போகிறதோ என்ற பதற்றத்துடன் டெல்லி நீதிமன்றம் வந்திருந்த கனிமொழியின் தாயார் ராஜாத்திஅம்மாள் மஞ்சள் நிற சேலை அணிந்து வந்திருந்தார். கருணாநிதியின் மஞ்சள் துண்டு இல்லாத குறையை ராஜாத்தி அம்மாள் போக்கினார். ஒருவேளை சனிப்பெயர்ச்சி கனிமொழிக்கு ஒர்க் அவுட் ஆகுதோ.