எம்.பி.க்களுக்கு 'இந்தி' வகுப்பா? மத்திய அரசு மீது தி.மு.க. எம்.பி. கே.பி. ராமலிங்கம் பாய்ச்சல்!!
டெல்லி: எம்.பிக்களுக்கு இந்தி வகுப்புகள் நடத்த இருக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு தி.மு.க.வின் கே.பி. ராமலிங்கம் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தி மொழிக்கு மட்டுமே பிரதமர் மோடி முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இந்தி மொழியில் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பேசுவது தங்களுக்கு புரியவில்லை என்று கூறியிருக்கின்றனர்.. இதனைத் தொடர்ந்து தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிஷா, மேற்குவங்கம் உள்ளிட்ட இந்தி மொழி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த 30 எம்.பிக்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்தி வகுப்புகள் நடத்தப்பட இருக்கிறது.

இந்த வகுப்புகளுக்கான ஏற்பாடுகளை உள்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. இதில் கலந்து கொள்ள சில எம்.பி.க்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
ஆனால் தி.மு.க.வைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.யான கே.பி. ராமலிங்கம், மத்திய அரசின் இந்தி வகுப்புகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மத்திய அரசு இந்தி மொழியை மட்டுமே முன்னிறுத்துவது மிகவும் தவறான முன்னுதாரணமாகிவிடும். தென்னிந்தியாவைச் சேர்ந்த எம்.பி.க்கள் இந்தி பேசுகிற மாநில எம்.பி.க்களுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் வகுப்புகளை நடத்த விடுவார்களா?
மக்கள் பணத்தை வீணடிக்கிற செயலைத்தான் மத்திய அரசு செய்கிறது.. இந்தி மொழிக்கு மட்டுமே பிரதமர் மோடி முன்னுரிமை அளிக்கக் கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications