கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. ராஜ்ய சபாவில் திருச்சி சிவா கோரிக்கை
கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என திமுக எம்பி திருச்சி சிவா ராஜ்ய சபாவில் கோரிக்கை வைத்துள்ளார்.
Recommended Video
டெல்லி: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று திமுக எம்பி திருச்சி சிவா ராஜ்யசபாவில் பேசியுள்ளார்.
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி முதுமை காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி உயிரிழதார்.
தமிழ்நாட்டில் ஐந்து முறை முதல்வராக இருந்தவர், தேசிய அரசியலில் முக்கிய பங்காற்றியவர். அவருடைய மக்கள் பணிக்காக அவரது உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் ராஜ்ய சபாவில் பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துப் பேசினார்.
திருச்சி சிவா ராஜ்யசபாவில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சாதனைகளை சுட்டிக்காட்டி பேசுகையில், "கருணாநிதி 80 ஆண்டுகள் பொது வாழ்க்கையில் 50 ஆண்டுகள் திமுகவின் தலைவராக இருந்தவர். அடித்தட்டு மக்கள் மேம்பட பெரும் பங்காற்றியவர். சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வியை சந்திக்காதவர். 13 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கலை, இலக்கியம், அரசியல் என பன்முகத் தன்மை கொண்ட தலைவர் கருணாநிதியின் இழப்பு ஒரு வரலாற்று பேரிழப்பு. அவருடைய சாதனைகளுக்காக இந்திய அரசு கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.
முன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஆகஸ்ட் 7 ஆம் தேதி கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசியபோது, கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது குறிப்பிடத் தக்கது.