பந்த் தொடர்பாக வாட்ஸ்அப்பில் வரும் வதந்திகளை ஃபார்வேர்ட் செய்யாதீர்: பெங்களூர் போலீஸ் கமிஷனர்
பெங்களூரு: பந்த் தொடர்பாக வாட்ஸ்அப்பில் உலவும் வதந்திகளை ஃபார்வேர்ட் செய்ய வேண்டாம் என்று பெங்களூரு போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி தெரிவித்துள்ளார்.
கர்நாடக பந்த்தையொட்டி பெங்களூருவில் இன்று காலை முதல் முழு அடைப்பு வெற்றிகரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து பெங்களூரு மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் சந்தீப் கூறுகையில், கட்டாயமாக கடையை மூடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளோம். நேற்று இரவு முதலே ரவுடி பட்டியலில் இருப்போரை கைது செய்துவருகிறோம். பெங்களூரு மத்திய மண்டலத்தில் மட்டும் 20 பேரை கைது செய்துள்ளோம். இந்த கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.. இதுதவிர, அமைதியை கெடுக்கும் வகையில் யார் செயல்படுவார்களோ அவர்களை கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி கூறுகையில், தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவோ அல்லது வேறு வகையிலான வதந்திகளையோ மக்கள் நம்ப வேண்டாம். எந்த தகவல் வாட்ஸ்அப்பில் வந்தாலும், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு (100) போன் செய்து விவரத்தை தெரிந்துகொள்ளலாம். வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் மெசேஜ்களை பரப்ப வேண்டாம். இவ்வாறு கமிஷனர் கூறியுள்ளார்.
தமிழ் அமைப்பு என்று கூறி, சில அமைப்பினர், தங்களது போன் நம்பருடன், பெங்களூரு வாழ் தமிழர்களுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு தகவலை அனுப்பி வருகின்றனர். அதில், கன்னடர்கள், தமிழர்களை தாக்க திட்டமிட்டுள்ளனர். அதுபோன்ற எந்த சம்பவம் நடந்தாலும், உடனடியாக எங்களை அழைக்கவும்., உதவிக்கு வருகிறோம் என்று கூறப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவலை தொடர்ந்துதான், போலீஸ் கமிஷனர், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications